சிங்கப்பூர் உலகின் ஐந்தாவது அறிவார்ந்த நகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.
ஏப்ரல் 9ஆம் தேதி வெளியான ‘அறிவார்ந்த நகரக் குறியீடு 2024’ எனும் வருடாந்தரத் தரவரிசைப் பட்டியலில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டு நிலைகள் முன்னேறியுள்ளது.
ஆசியாவில் முதலிடத்தைப் பெற்றுள்ள சிங்கப்பூர், உலகத் தரவரிசைப் பட்டியலில் முன்னணியில் உள்ள 10 நகரங்களில் இடம்பிடித்த ஒரே ஆசிய நகரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நகரங்கள் தொழில்நுட்பத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில் உலகின் 142 நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன.
வசதிகுறைந்தோர் வசிக்கும் பகுதிகளில் போதிய அளவு அடிப்படைத் துப்புரவுச் சேவை வழங்குதல், பொதுப் போக்குவரத்து, பொதுப் பாதுகாப்பு ஆகிய அம்சங்களில் சிங்கப்பூர் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
உலகின் அறிவார்ந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தை சுவிட்சர்லாந்தின் ஸூரிக் நகரம் தக்கவைத்துக்கொண்டுள்ளது. நார்வேயில் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் கேன்பரா, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஆகியவை அடுத்தடுத்த நிலைகளில் உள்ளன.
பெய்ஜிங், தைப்பே, சோல், ஷங்காய், ஹாங்காங் ஆகியவை பட்டியலில் முன்னணியில் உள்ள 20 நகரங்களுள் இடம்பிடித்துள்ளன.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிர்வாக மேம்பாட்டுக் கல்விக்கழகம் எனும் வணிகப் பள்ளி இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2019 முதல் 2021 வரை பட்டியலில் முதலிடம் வகித்த சிங்கப்பூர், 2023ல் ஏழாம் இடத்துக்கு இறங்கியது. 2022ல் இந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை.
இவ்வாண்டுப் பட்டியலின் முதல் 20 நிலைகளில் அமெரிக்க நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை.