முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தின் (சிஎஸ்பி) மூலம் தங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூரும் பிரான்சும் ஈடுபடவுள்ளன.
2025ஆம் ஆண்டு இருநாட்டு உறவின் 60ஆம் ஆண்டு நிறைவு அனுசரிக்கப்படவுள்ளது. அதை முன்னிட்டு சிங்கப்பூரும் பிரான்சும் இம்முயற்சியில் இறங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பிரான்சுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஓர் அங்கமாக பிரெஜ்சு அதிபர் இமானுவெல் மெக்ரானுடன் வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 11) அவர் இரவு விருந்து உணவருந்தியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.
சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவு சிஎஸ்பி பங்காளித்துமாக உருவெடுப்பது பன்முகத்தன்மைகொண்ட இருநாட்டு ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது; அதோடு, மின்னிலக்கப் பொருளியல் போன்ற புதிய துறைகளில் வருங்காலத்தைக் கருத்தில்கொண்டு கட்டமைப்பை உருவாக்குவதில் இருநாடுகளுக்கும் உள்ள விருப்பத்தைக் காட்டுகிறது என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுடன் சிஎஸ்பி பங்காளித்துவத்தைச் செய்துகொண்டுள்ளது. பொருளியல் மற்றும் வர்த்தகம், தற்காப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள், அறிவியல் மற்றும் புத்தாகம் உள்ளிட்ட அம்சங்களை அந்தப் பங்காளித்துவம் உள்ளடக்குகிறது.
பிரான்சுக்கும் இந்த வட்டாரத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை இன்னும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் திரு வோங், திரு மெக்ரான் இருவரும் கலந்துபேசினர். அந்த வகையில் ஆசியான் உறுப்பு நாடுகளின் மின்சார விநியோகக் கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் இலக்கைக் கொண்டஆசியான் மின்சார உள்கட்டமைப்புத் (ஆசியான் பவர் கிரிட்) திட்டத்தைப் பற்றியும் அவர்கள் பேசினர்.
சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையே நீண்டகாலமாக தற்காப்புத் தொடர்புகள் இருந்து வருகின்றன. மேலும், பொருளியல், பாதுகாப்பு, கலாசாரம், ஆய்வு உள்ளிட்டவற்றின் தொடர்பிலும் இருநாடுகளுக்கிடையே வலுவான உறவு இருக்கிறது.
பிரான்ஸ், சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய வர்த்தகப் பாங்காளியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாகும். அதேபோல் சிங்கப்பூர், பிரான்சின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக இருக்கும் ஆசியான் உறுப்பு நாடாகும்.
சிங்கப்பூர் நிதி அமைச்சருமான திரு வோங் புதன்கிழமையிலிருந்து (ஏப்ரல் 10) சனிக்கிழமை (ஏப்ரல் 13) வரை பிரான்சுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கு முன்பு ஏப்ரல் எட்டாம் தேதி முதல் புதன்கிழமை வரை அவர் ஜெர்மனிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்தார்.