$7 மில்லியனுக்கும் அதிகமான தொகை பறிபோன மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் 276 பேர் விசாரணை செய்யப்படுகின்றனர்.
16 முதல் 71 வயதுக்குட்பட்ட 174 ஆண்களும் 102 பெண்களும் 1,200க்கும் மேற்பட்ட மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 11ஆம் தேதி வரையில் வர்த்தக விவகாரங்களுக்கான குற்றப் பிரிவும் ஏழு காவல்துறைத் தரைப்பிரிவுகள் மேற்கொண்ட இரண்டு வார நடவடிக்கையில் அச்சம்பவங்களில் அவர்களது தொடர்பு தெரியவந்துள்ளது.
வேலைகள், முதலீடுகள், நண்பர் போல் ஆள்மாறாட்டம், மின் வணிகம், இணையக் காதல் ஆகிய மோசடிகள் குறித்து சந்தேகநபர்கள் விசாரிக்கப்படுவதாகக் காவல்துறை தெரிவித்தது.
ஏமாற்றுதல், பண மோசடி அல்லது உரிமம் இல்லாமல் கட்டணச் சேவைகளை வழங்கியது ஆகிய குற்றங்களுக்காகவும் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏமாற்றுக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம். கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டு வரையிலான சிறை, $500,000 வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
உரிமம் இல்லாமல் கட்டணச் சேவைகளை வழங்கிய எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $125,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.