செம்பவாங் கப்பல் பட்டறை, முன்னாள் ஜூரோங் பறவைப் பூங்கா, கிராஞ்சியில் உள்ள சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் போன்ற இடங்களை பொழுதுபோக்கு இடங்களாக மாற்ற பொதுமக்களிடம் யோசனை கேட்டுள்ளது நகர மறுசீரமைப்பு ஆணையம்.
இது சிங்கப்பூரின் பெருந்திட்டங்களுக்குள் அடங்கும்.
நகர மறுசீரமைப்பு ஆணையம் பெருந்திட்டம் குறித்து 2025ஆம் ஆண்டு தகவல் வெளியிடும்.
இந்தப் பெருந்திட்டம் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வழிகாட்ட உதவும். மேலும், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் திட்டம் குறித்து மதிப்பாய்வு செய்யப்படும்.
இந்நிலையில், தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ ஞாயிற்றுக்கிழமையன்று ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள வெஸ்ட்கேட் கடைத்தொகுதியில் பெருந்திட்டம் குறித்த கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்தார்.
அண்மையில் பொழுதுபோக்கு அம்சங்கள் குறித்து சிங்கப்பூரர்கள் சொன்ன யோசனைகள், திட்டங்கள் போன்றவையும் அந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
பொழுதுபோக்கு திட்டங்கள் குறித்து 16 வயதுக்கு மேற்பட்ட 3,000 சிங்கப்பூரர்களிடம் கருத்து கேட்க 2022ஆம் ஆண்டு நகர மறுசீரமைப்பு ஆணையம் ஒரு குழு அமைத்து தரவுகளை சேகரித்து வருகிறது.
வீடுகளுக்கு அருகே உணவு நிலையங்கள், கடைத்தொகுதிகள், உடற்பயிற்சி செய்ய வசதியான இடங்கள் இடம்பெற வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புவதாக நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.