யூனோஸ் வீவக கட்டடத்தில் தீ; 40 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

யூனோஸ் வீவக கட்டடத்தில் தீ; 40 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

1 mins read
12306149-25cc-4111-a802-ec2f60753f03
கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பொதுத் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த சில பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர். - படம்: AGENTHERMIEMALEK/டிக்டோக்

யூனோஸ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் ஏப்ரல் 15ஆம் தேதியன்று தீ மூண்டது.

இதையடுத்து, 40 குடியிருப்பாளர்கள் கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதையும் அதைக் கட்டடத்துக்கு வெளியிலிருந்து குடியிருப்பாளர்கள் பார்ப்பதையும் காட்டும் டிக்டோக் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

25 யூனோஸ் கிரசெண்ட்டில் மாலை 6.45 மணி அளவில் தீ மூண்டதாகத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள் தீயை அணைத்தனர்.

கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பொதுத் தாழ்வாரத்தில் வைக்கப்பட்டிருந்த சில பொருள்கள் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் கூறினர்.

தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுவதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

குறிப்புச் சொற்கள்