கிம் தியன் சாலை புளோக் 131பி குடியிருப்பாளர்கள் சிலர் வியாழக்கிழமை காலையில் (ஏப்ரல் 17) கண்விழித்தபோது தங்கள் வீடுகளில் தண்ணீர் விநியோகம் துண்டிக்கப்பட்டிருப்பதை அறிந்தனர்.
குறைந்தது ஆறு மணி நேரம் நீடித்த தண்ணீர் விநியோக இடையூறுக்கு நிலத்தடி தண்ணீர் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணம் என்று தஞ்சோங் பகார் நகர மன்றப் பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவத்தால் அந்த அடுக்குமாடிக் கட்டத்தின் இரண்டாம் மாடியிலிருந்து ஐந்தாம் மாடிவரையுள்ள 16 வீடுகள் பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த 30 மாடி வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடியிலுள்ள மற்ற தளங்களும் அப்பகுதியிலுள்ள மற்ற அடுக்குமாடிகளும் பாதிக்கப்படவில்லை.
ஏப்ரல் 17ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தண்ணீர்த் தடையை குடியிருப்பாளர் ஒருவர் கவனித்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ‘தற்காலிக இணைப்பு’ மூலம் குத்தகையாளர்கள் தண்ணீர் விநியோகித்ததால், அதே நாளில் காலை 11 மணி அளவில் தண்ணீர் விநியோகம் சீர்பட்டதாக நகர மன்றப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.
பொதுப் பயனீட்டுக் கழகம், நகர மன்ற ஊழியர்கள் காலை 8 மணி முதல் குடியிருப்பாளர்களுக்கு தண்ணீர்ப் பைகளை விநியோகித்தாகவும் அவர் கூறினார். மேலும், தரைத்தளத்திலிருந்து ஐந்தாவது மாடிவரை குப்பை போடும் பகுதிக்கு அருகில் தண்ணீர் எடுக்க குழாய்கள் நிறுவப்பட்டன.
நகர மன்ற ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தண்ணீர்க் குழாய் வெடித்தது பற்றி குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்தனர். மின்தூக்கித் தளங்களிலும் அறிவிப்புகள் வைக்கப்பட்டன.
வீவக அடுக்குமாடியில் ஒரு வாரத்திற்குள் பதிவாகும் இரண்டாவது தண்ணீர் இடையூறு இது.
ஏப்ரல் 13ஆம் தேதி, செகார் சாலை புளோக் 485ல் மூன்று மணி நேரத் தண்ணீர் இடையூறு ஏற்பட்டது.