ஈராண்டுகளுக்குக் குறைவான அனுபவம் உள்ள தாதியரில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், சிக்கலான சிகிச்சை முறைகளைத் தனியே கையாளச் சிரமப்படுவதாக அண்மைய கருத்தாய்வில் தெரியவந்துள்ளது.
சிக்கலான மருத்துவ நெருக்கடியைக் கையாள்தல், நெஞ்சுப் பகுதியிலிருந்து திரவத்தை வெளியேற்ற உதவும் குழாயைப் பராமரித்தல் போன்ற சிக்கலான சிகிச்சைமுறைகளும் இவற்றில் அடங்கும்.
அதனால் புதிய தாதியர் இத்தகைய சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும்போது, உயர்தரப் பராமரிப்பை உறுதிசெய்ய, கூடுதல் கால மேற்பார்வை அவசியமாகிறது என்று சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தாதியர் ஊழியரணியில் சேரும்போது எத்தகைய தயார்நிலையில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது இந்தக் கருத்தாய்வின் நோக்கம்.
2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தலைமையிலான குழு, 450க்கு மேற்பட்ட தாதியரிடம் ஆய்வு மேற்கொண்டது.
சிங்கப்பூரில் பட்டயம் அல்லது பட்டக் கல்வியை முடித்த இந்தத் தாதியர் ஈராண்டுகளுக்குட்பட்ட காலத்தில் சிங்ஹெல்த் மருத்துவ நிலையங்களில் வேலைக்குச் சேர்ந்தவர்கள்.
புதிதாகத் தாதிமைத் தொழிலில் சேர்ந்த இவர்கள் எதிர்கொண்ட முக்கியச் சவால்களைக் கண்டறிய இந்தக் கருத்தாய்வு உதவியதாகக் கூறப்பட்டது.
‘நர்ஸ் எடுகேஷன் டுடே’ எனும் அனைத்துலக சஞ்சிகையில் கடந்த பிப்ரவரி மாதம் இந்தக் கருத்தாய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டன.
கருத்தாய்வை சிங்கப்பூர் பொது மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகம் ஆகியவை இணைந்து மேற்கொண்டன.
கருத்தாய்வில் பங்கேற்ற 40 விழுக்காட்டினர், நோயாளிக்குத் தேவைப்படும் பராமரிப்புக்கும் அவரது குடும்பத்தினரின் விருப்பத்துக்கும் இடையிலான சர்ச்சை போன்ற விவகாரங்கள் கவலை அளிக்கக்கூடியவை என்று கூறினர்.
மரணத் தறுவாயில் இருக்கும் நோயாளியைப் பராமரிப்பது சிரமம் என்று 37 விழுக்காட்டுத் தாதியர் குறிப்பிட்டனர்.
ஒரே நேரத்தில் பல நோயாளிகளைக் கையாள வேண்டிய சூழலில் அவர்களின் எந்தெந்தத் தேவைகளுக்கு முன்னுரிமை தருவது என்பதில் சவால்களை எதிர்நோக்குவதாக 25 விழுக்காட்டினர் கூறினர்.
எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு அவசரமாக மருந்து தரவேண்டியிருக்கலாம். அதேவேளையில் மற்றொருவர் அவசரமாகக் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்.
தாதிமைத் துறையில் பட்டம் பெற்றவர்கள் ஊழியரணியில் சிரமமின்றி இணைந்துகொள்வதற்கு உதவ, கூடுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஒப்புக்கொண்டது.