கீல் (ஜெர்மனி): சிங்கப்பூர், தான் வாங்கிய கடைசி ‘இன்வின்சிபல்’ ரக நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனியில் வெளியிட்டுள்ளது.
218எஸ்ஜி ரக நீர்மூழ்கிக் கப்பல் என்றும் அழைக்கப்படும் இக்கப்பலின் நீளம் 70 மீட்டராகும். இந்நிகழ்வு, சிங்கப்பூரின் நீர்மூழ்கிக் கப்பல் துறையில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர், 2013ஆம் அண்டில் இக்கப்பல்களில் நான்கை செய்து தருமாறு திசன்குருப் மரீன் சிஸ்டம்ஸ் (டிகஎம்எஸ்) கடல்துறை செயல்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்தது. அவற்றில் ஆகக் கடைசியானது திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 22) ஜெர்மனியின் துறைமுக நகரான கீலில் டிகஎம்எஸ் நிறுவனத்தின் கப்பல் பட்டறையில் வெளியிடப்பட்டது.
சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான டியோ சீ ஹியன்னின் தலைமையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியசும் அதில் கலந்துகொண்டார்.
இனிமிட்டபல் என்று பெயரிடப்பட்டுள்ள இக்கப்பல், கடற்படையைப் பொறுத்தவரை சிங்கப்பூருக்கும் ஜெர்மனிக்கும் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் வலுவான உறவின் காரணமாக உருவானது என்று திரு டியோ தமது உரையில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் கடற்படை, 1970களில் ஜெர்மனியில் உற்பத்தியான ஏவுகணைக் கப்பல்களை வாங்கியது. அதை திரு டியோ சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு, தற்காப்பு உறவுகள் பல்வேறு அம்சங்களில் பிரதிபலிக்கப்படுவதையும் அவர் பாராட்டிப் பேசினார். மின்னிலக்கம் உள்ளிட்ட மற்ற துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
வட்டார அளவில் கடல்வழித் தொடர்புகளைப் பாதுகாப்பது சிங்கப்பூர் கடற்படையின் இலக்காகும். அதன் தொடர்பில் கடற்படையின் ஆற்றலைப் புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மேம்படுத்தும் என்று திரு டியோ சொன்னார்.
அனைத்துலகக் கடற்பாதைகள் சந்திக்கும் பகுதியில் சிங்கப்பூர் அமைந்திருப்பதை திரு டியோ சுட்டினார். ஆண்டுதோறும் சிங்கப்பூர், மலாக்கா நீரிணை ஆகியவை வழியாக சுமார் 90,000 கப்பல்கள் செல்கின்றன. மேலும், 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் துறைமுகம் 39 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டது.