உள்துறைக் குழு அதிகாரிகள் 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு அவதாரங்களுடன் (அவதார்) பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம்.
உள்துறைக் குழுவின் பாவனைப் பயிற்சி அமைப்பு (எச்டிஎஸ்2) ஒரு பகுதியாக, ஏப்ரல் 23 அன்று பழைய சுவா சூ காங் சாலையிலுள்ள அகாடமியின் வளாகத்தில் நடைபெற்ற உள்துறைக் குழு பயிற்சிக் கழகம் (எச்டிஏ) வேலைத்திட்டக் கருத்தரங்கு 2024இன் போது செயற்கை நுண்ணறிவு அவதாரங்கள் இடம்பெற்றன.
கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 7,000க்கும் மேற்பட்ட உள்துறைக் குழு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்த இந்த அமைப்பு, அதிகாரிகளின் சூழ்நிலை விழிப்புணர்வு, உணர்ந்தறிதல் பயிற்சிகளுக்கு மெய்நிகர் பயன்படுத்துகிறது. பல்வேறு பாவனைப் பயிற்சிகளில் உத்திபூர்வ முடிவுகளை எடுக்க வைக்கிறது..
தற்போது, இந்த அமைப்பின் பயிற்சிகளில் சக அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பெரும்பாலும் பயிற்சி மதிப்பீடுகளின்போது, பாவனை முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளுக்கு வீரர்கள் தேவைப்படுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு அவதாரங்கள் அத்தகைய வீரர்களின் தேவையைக் குறைக்கும், பயிற்றுவிப்பாளர்கள் பயிற்சியாளர்களை வழிநடத்துவதிலும் அவர்களின் மென் திறன்களை மதிப்பீடு செய்வதிலும் கவனம் செலுத்த உதவும்.
உள்துறைக் குழு அகாடமி கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக செயற்கை நுண்ணறிவு அவதாரங்கள் சார்ந்து பணியாற்றி வருகிறது. ஒரு திருட்டுச் சம்பவத்தைக் கையாள்வதில் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான கருத்துருச் சான்றாக என இதுவரை இரு அவதாரங்களை அது உருவாக்கியுள்ளது.
பயிற்சியாளர்களின் வெவ்வேறு கேள்விகளுக்கும் முடிவுகளுக்கும் அவதாரங்கள் பதிலளிக்கக்கூடியவை. மேலும் உள்துறைக் குழுவின் சூழலுக்கும் பயிற்சித் தேவைகளுக்கும் ஏற்ப மாற்றியமைக்கக்கூடியவை என்று உள்துறைக் குழு அகாடமி கூறியது.
எச்டிஎஸ்2-இன் அடுத்த தலைமுறை தற்போது மேம்பாட்டில் உள்ளது என்றும், நீட்டிக்கப்பட்ட மெய்நிகர் மற்றும் செயல்திறன், பதிலளிக்கும் நேரம், முடிவு எடுப்பது குறித்த தரவுகளை சேகரிப்பது போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் என்றும் அது கூறியது.
உள்துறைக் குழு பாவனைப் பயிற்சிக்கான அகாடமியின் மைய திறன் மேம்பாடு உதவி இயக்குநரான காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கில்பர்ட் சென், எச்டிஎஸ்2-ஐ உருவாக்குவதற்கு செயற்கை நுண்ணறவு அவதாரங்கள் முக்கியமானவை என்றார்.
“உள்துறைக் குழு அகாடமியில், மனிதனை போன்று உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு அவதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய புத்தாக்கம், ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன,” என்று அவர் கூறினார்.
உள்துறைக் குழுவில் பயிற்சி, கற்றலில் உள்துறைக் குழு அகாடமி முக்கிய பங்கு வகிக்கிறது என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்துறை அமைச்சுக்கான துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் கூறினார்.
“உள்துறைக் குழு எதிர்கால சவால்களுக்குத் தயாராக, அதிகாரிகளின் கற்றல் தேவைகளைத் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். வேலை கடப்பாடுகளுடன் சமநிலை காணும் அதேநேரத்தில் அவர்களின் பயிற்சியில் பெரிதும் முதலீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்தவும் மறுவடிவமைக்கவும் உதவ, புதிய கற்றல் அணுகுமுறைகள், புதிய தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து கவனித்து, பயிற்சி, கற்றல் சூழல்களில் அவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார் அவர்.
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிகளுக்கு தலைமைத்துவத்தில் பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படும் பாம்பு- ஏணி விளையாட்டு, உள்துறைக் குழுவின் அறிவியல் தொழில்நுட்ப இணைந்து சிங்கப்பூர் சிறைச் சேவைகள் உருவாக்கியுள்ள தாக்குதலின் துல்லியத்தையும் பாதிப்பையும் அறிவதற்கான மூல முன்மாதிரி போன்ற பல நவீன தொழில்நுட்பங்கள் கருத்தரங்கை ஒட்டிய கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
அந்த மூல முன்மாதிரியால் தாக்குதலின் வேகத்தையும் பாதிப்பையும் அளவிடவும், தடியடி தாக்குதல்களின் துல்லியத்தை மதிப்பிடவும் முடியும். சிங்கப்பூர்ச் சிறைச் சேவை 2026ஆம் ஆண்டுக்குள் இந்த முறையை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது.
உள்துறைக் குழு அகாடமியின் தலைமை நிர்வாகி திரு. அன்வர் அப்துல்லா, அதன் பயிற்சி, கற்றல் முயற்சிகளின் தரத்தை உயர்த்த உறுதிபூண்டுள்ளதாகக் கூறினார்.
“பன்முக சவால்களை சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இன்றைய பல நெருக்கடிகள் நிறைந்த உலகில் பயணிப்பதற்கு பயனுள்ள பயிற்சியும் கற்றலும் இன்றியமையாதது. செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பம், கலப்பு மெய்நிகர் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சிகளை அகாடமி தொடர்ந்து முன்னெடுக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.