பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வில் கலந்துகொண்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் மேற்குறிப்பிட்ட கூற்றை நம்புவதாகவும் எஸ்எம்யு ஏப்ரல் 18ஆம் தேதி வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு இதே பிரச்சனை குறித்து நடந்தப்பட்ட ஆய்வில் 53 விழுக்காட்டினர் உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் திடிரென நிகழ்கின்றன என்ற எண்ணம் கொண்டிருந்தாக அவ்வாண்டு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அவ்வாண்டைக் காட்டிலும் தற்போது வெளியான ஆய்வு முடிவில் அவ்வெண்ணம் கொண்டவர்களின் விழுக்காடு சற்று அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், 31 விழுக்காட்டினர் உயிர் மாய்ப்பு எண்ணம் கொண்டவர்கள் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை என்று நம்புகின்றனர், இது 2022ல் 27 விழுக்காடாக இருந்தது.
உயிர்மாய்ப்பு குறித்து ஒருவர் பேசினால், அவர் தனது உயிரை மாய்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் 10ல் எட்டு பேருக்கு இருக்கிறது என எஸ்எம்யு அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
“உயிர்மாய்ப்பு குறித்து மக்களிடம் நிலவும் ஆகச் சிறந்த கட்டுக்கதை இது ” என்று எஸ்எம்யுவின் புள்ளியல் துறையில் முதன்மை விரிவுரையாளராக இருக்கும் ரோஸி சிங் கூறினார்.
இவர்,140 இளங்கலைப் பட்டதாரிகளைக் கொண்டு உயிர்மாய்ப்பு எண்ணங்கள் குறித்த ஆய்வை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்துடன் இணைந்து இக்கருத்துகணிப்பு நடத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டிலிருந்து உயிர்மாய்ப்புக் குறித்துத் தவறான கருத்துக்கள் தொடர்வதாக கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 5,274 பேர் கலந்துகோண்டனர். அவர்களிடமிருந்து நேர்காணல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் ‘ஸூம்’ வழியாகவும் கருத்துகள் பெறப்பட்டன.
சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனச் சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் தெரிவித்ததையடுத்து இக்கருத்துகணிப்பு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு 476 உயிர் மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.