தாவர வகை புரதச்சத்து உணவை வாடிக்கையாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் முயற்சியாக புதிய நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இந்த தாவர வகை புரதம் நிறைந்த உணவு வகைகளின் ருசி, ஊட்டச்சத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தெமாசெக் நிறுவனத்தின் ஆதரவில் செயல்படும் நீடித்த நிலைத்தன்மையுடைய உணவு உற்பத்தி செய்யும் நுராசா என்ற நிறுவனம் இந்த உணவு தொழில்நுட்ப புத்தாக்க நிலையத்தை புதன்கிழமை (ஏப்ரல் 24) அன்று திறந்து வைத்தது.
இந்த நிலையம் மாற்று புரதச்சத்து உணவு உற்பத்தியை அதிகரித்து அதை வர்த்தக ரீதியில் அறிமுகப்படுத்த உதவும்.
“பல்வேறு நிறுவனங்கள் இங்கு வந்து தங்கள் புத்தாக்கத் திட்டங்களை செயல்படுத்த இந்த நிலையம் சிறந்த இடமாக அமைந்துள்ளது. இது சிங்கப்பூருக்கு மட்டுமல்லாது இந்த வட்டாரத்துக்கும் பயனளிக்கக்கூடியது,” என்று நிலையத்தை பயோபொலிசில் அமைந்துள்ள நிறுவனத்தின் திறப்பு விழாவில் துணைப் பிரதமர் கலந்துகொண்டு பேசினார்.
எனினும், புத்தாக்கத் திட்டங்களுக்கு ஆகும் செலவைக் குறைக்கவும் புதிய நிறுவனங்களின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கவும் புதிய தரநிலையை ஏற்படுத்தவும் இன்னும் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
“வளர்ந்து வரும் தொழில்நுட்பம், திறன் பரிமாற்ற முயற்சிகள், ஒரே மாதிரியான பல முதலீடுகளைத் தவிர்த்தல், ஆராய்ச்சி, பொதுத் துறை, தனியார் நிறுவன பங்காளித்துவம் ஆகியவற்றின் மூலம் இந்தப் புத்தாக்க முயற்சியை வேகப்படுத்தலாம்,” என்று துணைப் பிரதமர் ஹெங் விளக்கினார்.
கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து செயல்பாட்டில் உள்ள ‘த ஃபுட் இன்னோவேஷன் சென்டர்’ அமைப்புக்கு இரண்டு சோதனைக்கூடங்கள் உள்ளன. அதில் ஒன்று நுராசா, ஸ்கேல்அப் அமைப்புகளுக்கு இடையிலான பங்காளித்துவம். மற்றொன்று ஏஸ்டார் போன்ற மற்ற ஆய்வுக் கழகங்கள் என்று திரு ஹெங் கூறினார்.