இந்திய ராணுவக் கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையைச் சேர்ந்த விமானி மேஜர் சி. தீனேஸ்வரனுக்குச் சிறந்த அனைத்துலக மாணவ அதிகாரிக்கு வழங்கப்படும் ‘சதர்ன் ஸ்டார்’ பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இப்பதக்கத்தை வென்ற மூன்றாவது சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி இவர் ஆவார். இந்திய ராணுவக் கல்லூரியில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இந்தப் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, இந்தியாவின் பழமையான ராணுவக் கல்லூரிகளில் ஒன்றான தற்காப்புச் சேவை பணியாளர் கல்லூரியில் 36 வயதான தீனேஸ்வரன் பணியாளர் பயிற்சியில் சேர்ந்தார். அவருடன் இணைந்து 27 நாடுகளிலிருந்து மொத்தம் 36 அனைத்துலக மாணவ அதிகாரிகள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ராணுவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி வட்டாரத்தில் இருக்கும் வெலிங்டனில் 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முன்னாள் நைஜீரிய அதிபர் முஹம்மது புஹாரி, பிஜியின் பிரதமர் சிதிவேனி ரபுகா ஆகியோர் இக்கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் விமானியாக 15 ஆண்டுகள் அனுபவம் பெற்ற தீனேஸ்ரன், இந்திய ராணுவக் கல்லூரியில் இந்தப் பத்து மாதப் பயிற்சியை மேற்கொள்ள பறப்பதிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
விமானி அறையில் தனது பெரும்பாலான நேரத்தை செலவழித்த அவருக்குப் பயிற்சியின் போது அதிக நேரத்தை விரிவுரை அரங்கில் செலவழித்தது மிகவும் புது அனுபவமாக இருந்தது எனத் தெரிவித்தார்.
இப்பயிற்சி மிகவும் கடுமையானதாகவும் மிகவும் அவசியமான ஒன்றாகவும் இருந்ததாக வெலிங்டனில் தான் பயிற்சி பெற்ற காலத்தைக் குறித்து மேஜர் தீனேஸ்வரன் கூறினார்.
“கற்றல் சூழலுக்கு ஏற்றவாறு தம்மை மாற்றிகொள்ளும் அவசியத்தையும் அனைத்துலக சகாக்களின் பல்வேறு குழுக்களிடையே இணைந்து செயல்படுவதற்கான அழுத்தத்தையும் சேர்த்து நான் ஒரு நேர்மறையான நெகிழ்ச்சியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது,” என அவர் தனது அனுபவத்தை மேலும் எடுத்துரைத்தார்.
“அனைத்தையும் மீறி, நான் எனது பயிற்சியை நன்றாகச் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்,” என்று தெரி வித்தார்.
“நான் என்னால் முடிந்ததைச் செய்தேன். ஒவ்வொரு பணிக்கும் எனது 100 விழுக்காடு உழைப்பை வழங்குவதை உறுதிசெய்தேன். அதிர்ஷ்டவசமாக, என்னை சிறந்த மாணவராக தேர்வுசெய்ய அது உதவியது,” என தான் சிறந்த மாணவ அதிகாரியாகத் தேர்வானதைப் பெருமிதத்தோடு கூறினார்.
“குறிப்பாக அனைத்துலக அரங்கில் சிங்கப்பூரைப் பெருமைப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. எனது எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடவும் இப்பதக்கம் என்னை ஊக்குவிக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது,” எனக் கூறி தனது உணர்வுகளை மேஜர் தீனேஸ்வரன் பகிர்ந்துகொண்டார்.