டியுபரஸ் ஸ்க்லெரோசிஸ் காம்பிளக்ஸ் (டிஎஸ்சி) எனும் அரிய நோய், 8,000 பேரில் ஒருவரைப் பாதிக்கிறது.
இந்நோய்க்கு ஆளாபவருக்கு உடலின் பல்வேறு பகுதிகளில் கட்டிகள் வளரும். அந்தக் கட்டிகள் அபாயகரமானவையாக இல்லாமல் இருக்கலாம்.
மூளை, முதுகுத் தண்டு, நரம்புகள், கண்கள், நுரையீரல்கள், இதயம், கல்லீரல்கள், எலும்புகள், தோல் போன்றவற்றில் கட்டிகள் வளரலாம். கட்டுப்பாடின்றி வளரும் மரபணுக்கள் போன்ற காரணங்களால் இந்நிலை உருவாகிறது.
டிஎஸ்சிக்கு ஆளாவோர் அதிகம் நோய்வாய்ப்படாமலும் இருக்கலாம், உயிர் போகும் அபாயத்தையும் எதிர்நோக்கலாம். எனினும், அதிகம் நோய்வாய்ப்படாத ஒருவரிடமிருந்து அவரின் பிள்ளை டிஎஸ்சிக்கு ஆளாகலாம். அந்தப் பிள்ளை மோசமாக நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் சுமார் 700 பேருக்கு இந்நோய் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 30 விழுக்காட்டினருக்குப் பெற்றோரிடமிருந்து இந்நோய் வந்திருக்கலாம்.
‘மெடிக்கல் மிஸ்ட்ரீஸ்’ எனப்படும் அரிய நோய்களை ஆராயும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் புதிய தொடரின்கீழ் வெளியான கட்டுரையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
டிஎஸ்சி நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க லோ நெ-ரான் எனும் நரம்பியல் மருத்துவர், கேகே மகளிர், சிறார் மருத்துவமனையில் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மருந்தகம் ஒன்றைத் திறந்தார் என்றும் ‘மெடிக்கல் மிஸ்ட்ரீஸ்’ கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டனில் வேலை செய்த இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக அந்நாட்டின் பாத் நகரில் டிஎஸ்சி மருந்தகம் ஒன்றுக்குத் தலைமை தாங்கினார், சென்ற ஆண்டு சிங்கப்பூர் திரும்பினார்.
கேகே மருத்துவமனையில் உள்ள இவரின் மருந்தகத்தில் சுமார் 12 நோயாளிகள் டாக்டர் லோவிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“டிஎஸ்சி, நான் நிபுணத்துவம் பெற்றுள்ள பிரிவில் ஓர் அங்கமாகும். அதில் நான் 14 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளேன். ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாகத்தான் பாத்தில் இருக்கும் டிஎஸ்சி நிலையத்தில் பணியாற்றினேன். பெரியவர்கள், சிறுவர்கள் உட்பட ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 300 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கினேன்,” என்றார் டாக்டர் லோ.
டிஎஸ்சியை குணப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு இப்போது மருந்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினை தரக்கூடிய கட்டிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றவும் செய்வர்.