வேக வரம்பு மீறும் வாகனங்களை சிவப்பு விளக்குக் கேமராக்கள் மூலம் பதிவு செய்யும் முறையை ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து போக்குவரத்துக் காவல்துறை படிப்படியாகத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து, ஏப்ரல் 21ஆம் தேதி நிலவரப்படி இந்த அணுகுமுறை வாயிலாக 800க்கும் அதிகமான வேக வரம்பு விதிமீறல்கள் பதிவாகி உள்ளன.
வேக வரம்பை மீறும் வாகனங்களைப் பதிவு செய்யும் அம்சம் சிவப்பு விளக்குக் கேமராக்களில் ஆரம்பத்திலிருந்து இருந்திருக்கிறது. ஆனால், 2023ஆம் ஆண்டில் வேக வரம்பு மீறல் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்த பிறகு அதை இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நான்கு வெவ்வேறு வேக வரம்பு அமலாக்க கேமராக்கள் எங்கெங்கு உள்ளன என்பதை காட்டும் வரைபடம் காவல்துறையின் இணையப்பக்கத்தில் உள்ளது.
சிவப்பு விளக்குக் கேமராக்கள் எந்தெந்த இடங்களில் இருக்கின்றன என்பதை காட்டும் வரைபடமும் அந்த இணையப்பக்கத்தில் உள்ளது.
240 இடங்கள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. 12 சிவப்பு விளக்குக் கேமராக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுகின்றன.
வேக வரம்பு விதிமீறலைப் பதிவு செய்யும் சிவப்பு விளக்குக் கேமரா குறித்து காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் வில்லியம் ஃபூ, ஏப்ரல் 29ஆம் தேதியன்று போக்குவரத்துக் காவல்துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
இவர் போக்குவரத்துக் காவல்துறையின் கண்காணிப்புக் கேமரா பிரிவின் தலைவர்.
சிவப்பு விளக்குக் கேமராக்களில் வேக வரம்பு விதிமீறல் அம்சத்தை இயக்குவதன் மூலம் சாலைகளில் வேக வரம்பை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போக்குவரத்துக் காவல்துறை பயன்படுத்தும் சாதனங்கள் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
“புதிய அணுகுமுறை நடப்புக்கு வந்ததை அடுத்து, 800க்கும் அதிகமான வேக வரம்பு விதிமீறல்கள் பதிவாகி உள்ளன. இது கவலைக்குரியது. போக்குவரத்துக் காவல்துறை அதன் அமலாக்கப் பணிகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தும். விதிமுறைகளுக்கு உட்படாத வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்,” என்று டிஎஸ்பி ஃபூ தெரிவித்தார்.