கொவிட்-19 தடுப்பூசி போட அழைப்பு; பொறுத்திருக்கும் முடிவில் முதியோர்

3 mins read
aabb6a93-3a61-49d4-a07e-da471c5a5fd6
கொவிட்-19 அலை ஏற்பட்டிருக்கும் செய்தியைத் தொடர்ந்து பலரும் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்லத் தொடங்கியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய கொவிட்-19 அலை குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசிய எட்டு முதியோர்களில் ஒருவரான 87 வயது திரு சவ் கெங் லின், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார். ஆனால் கூடுதல் தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் அவர் முடிவு செய்யவில்லை.

“உணவங்காடி போன்ற நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணிவேன், ஆனால், புதிய கொவிட்-19 அலை குறித்து பயப்படவில்லை. ஏற்கெனவே நான்கு முறை நோய்த் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்றார் அவர்.

அறுபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடையவர்கள் உட்பட கடுமையான நோய்க்கு ஆளாகக்கூடிய அதிக ஆபத்தில் இருப்போர், மருத்துவ ரீதியாக பாதிப்புக்கு ஆளாகக்கூடியோர், மூத்தோர் பராமரிப்பு இல்லங்களில் தங்கி இருப்போர் போன்றவர்கள் கடந்த 12 மாதங்களில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனில் உடனடியாக தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் புதிய கொவிட்-19 அலையை எதிர்நோக்குவதாக திரு ஓங் மே 18ஆம் தேதி கூறினார்.

அடுத்த இரண்டு முதல் நான்கு வாரங்களில் நோய்ப் பரவல் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொது மருத்துவமனைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவசரமற்ற அறுவைச் சிகிச்சைகளை குறைக்கின்றன.

மே 5 முதல் மே 11 வரையிலான வாரத்தில் கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்து 25,900 என்று பதிவானதாக அது தெரிவித்து உள்ளது. அதற்கு முந்திய வாரத்தில் அந்த எண்ணிக்கை 13,700 ஆக இருந்தது. கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் அன்றாட சராசரி எண்ணிக்கையும் 181லிருந்து 250க்கு அதிகரித்து உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 500க்கு அதிகரித்தால் அது சமாளிக்கக்கூடியது. ஆனால் அந்த எண்ணிக்கை அதன் பிறகும் இரட்டிப்பாகி, 1,000க்குச் சென்றால் மருத்துவமனை அமைப்பில் கணிசமான சுமையை ஏற்படுத்தும் என்று அமைச்சர் ஓங் முன்னதாகக் கூறியிருந்தார்.

ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸிடம் பேசிய மற்ற மூத்தவர்களில் சிலர், புதிய அலை பற்றிய செய்தியை அறிந்த பின்னர், பொறுத்திருந்து பார்ப்பதாகக் கூறினர்.

88 வயதான ஓய்வு பெற்ற பீட்டர் காங், தாம் நான்கு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், கூடுதல் தடுப்பூசியைக் கருத்தில்கொள்வதாகவும் கூறினார், ஆனால் அவர் இன்னமும் முடிவுசெய்யவில்லை.

“கூட்டமான இடங்களிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்கிறேன். எப்படியும் நான் அத்தகைய இடங்களுக்குச் செல்வது அரிது. நான் ஆரோக்கியமானவனாகவே கருதப்படுகிறேன்,” என்றார் அவர்.

மற்றொரு தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அவருக்குள்ள முக்கிய கவலை பக்க விளைவுகளின் ஆபத்து.

சிங்கப்பூர் மக்கள்தொகையில் எண்பது விழுக்காட்டினர் கொவிட்-19 நோய்த் தடுப்பூசியும் கூடுதல் காப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டுக்குள் காப்பூசி பெறவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட கொவிட்-19 நோய்த் தடுப்பூசி, தகுதிபெறும் அனைவருக்கும் தொடர்ந்து இலவசமாகப் போடப்படும். தேசிய நோய்த்தடுப்பு முயற்சியான ‘ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தில் (ஹெல்தியர் எஸ்ஜி)பதிவுசெய்து கொண்டோர் தீவு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 250 ஆரோக்கியமான எஸ்ஜி மருந்தகங்களில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.

அத்தகைய மருந்தகங்களின் கட்டமைப்பும் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும், அதிகமான மூத்தோரைச் சென்றடையும் முயற்சியாக, வரும் வாரங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட குடியிருப்பு வட்டாரங்களுக்கு கூடுதல் நடமாடும் தடுப்பூசி மருந்து குழுக்கள் அனுப்பப்படவுள்ளன.

மே 21 முதல் ஜூன் 29 வரை, ஐந்து கூட்டு பரிசோதனை, தடுப்பூசி மையங்களும் சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறைக்கு முந்திய நாள்களிலும் வழக்கமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலான சேவை நேரத்தை, காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நீடிக்கும்.

கடந்த 12 மாதங்களாக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத தனிநபர்களுக்கு சுகாதார அமைச்சு குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.

அருகிலுள்ள தடுப்பூசி நிலையங்கள், அங்கு வழங்கப்படும் தடுப்பூசி வகைகள் பற்றி அறிந்துகொள்ள https://gowhere.gov.sg/ என்ற இணையத் தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்