மோசடித் தடுப்பு அதிகாரிகளைப் போல் நடித்தோரிடம் $73,000 இழப்பு

மோசடித் தடுப்பு அதிகாரிகளைப் போல் நடித்தோரிடம் $73,000 இழப்பு

1 mins read
58854458-37f6-4af8-bc36-cad55f13040e
படம்: - சாவ்பாவ்

மோசடித் தடுப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்து மோசடியில் ஈடுபட்டவர்களிடம் சிலர் குறைந்தது 73,000 வெள்ளியைப் பறிகொடுத்துள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் குறைந்தது இருவர் இந்த மோசடிக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி தடுப்பு நிலையம், மோசடிகளைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. அதனைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல் நடித்தே சிலர் மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மோசடி தடுப்பு நிலையத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மேற்கொள்ளப்படும் மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை திங்கட்கிழமையன்று (மே 27) அறிக்கை ஒன்றின் வாயிலாகப் பொதுமக்களுக்கு எச்சரித்தது.

மக்களுக்கு உள்ளூர் கைப்பேசி எண்களிலிருந்து அழைப்பு வரும். அவர்கள் மீது விசாரணை நடத்தப்படுகிறது என்றும் அதன் தொடர்பில் காவல்துறை தலைமையகத்துக்கு அவர்கள் போகவேண்டும் என்றும் தொலைபேசி அழைப்பில் ‘ரோபோ’ குரலில் தெரிவிக்கப்படும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்டவரிடம் பேச ‘0’ எண்ணை அழுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படும்.

அதன் பின்னர் மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவர்; ஒருவர் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை அதிகாரியாக நடித்து ஏமாற்று வேலையில் ஈடுபடுவார். இவ்வாறே இத்தகைய மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்