வழக்கறிஞர் எம் ரவி தகுதி நீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அவர் தொடர்ந்து முறையற்ற நடத்தையைக் கொண்டிருந்ததாகவும் நேர்மையற்று நடந்துகொண்டதாகவும் ‘மூன்று நீதிபதிகள் நீதிமன்றம்’ தீர்ப்பளித்தது.
வழக்கறிஞர் தொழிலில் 25 ஆண்டுகளுக்குமேல் அனுபவம் உள்ள அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது முதல்முறை அன்று என நீதிமன்றம் குறிப்பிட்டது. கடந்த பல ஆண்டுகளில் வெவ்வேறு முறையற்ற நடத்தைக்காக அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுண்டு.
முக்கியமான சட்ட அமைப்புகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, நீதிமன்றத்தில் இடையூறு விளைவித்தது, தன்னிடம் சட்டச் சேவை நாடி வந்தவர்களை முறையற்று நடத்தியது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
சிங்கப்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைத் தீர்ப்பாயம் 10க்கும் மேற்பட்ட சம்பவங்களில் வழக்கறிஞர் ரவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததுண்டு. அபராதம் முதல் தொழில் செய்வதற்கு இடைக்காலத் தடை வரை பல்வேறு தண்டனைகள் அவருக்கு விதிக்கப்பட்டன.
முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அவர் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
மே 31 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் $20,000 செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.


