புளோக் 407 அங் மோ கியோ அவென்யூ 10ல் உள்ள காப்பிக்கடையில் ஜூன் 11ஆம் தேதி அதிகாலை தீ மூண்டது.
இதையடுத்து, அந்தக் குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் வசிக்கும் 18 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
யாரும் காயமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அதிகாலை 2.40 மணி அளவில் தீச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பாளர்கள், தீயை அணைத்தனர்.
காப்பிக்கடையில் உள்ள கடை ஒன்றில் அடுப்பில் வைக்கப்பட்ட உணவை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் அதன் விளைவாக கடை தீப்பிடித்துக்கொண்டது என்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
காப்பிக்கடையில் உள்ள பெரும்பாலான கடைகள் சேதமடைந்தன. மொத்தம் 9 கடைகள் தீக்கு இரையானதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூன் 11ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மூத்த அமைச்சரும் அங் மோ கியோ குழு நாடாளுமன்ற உறுப்பினருமான லீ சியன் லூங் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்த்தார்.
தொடர்புடைய செய்திகள்
பாதிப்படைந்த கடைக்காரர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் இழப்பீடு குறித்தும் பழுதுபார்ப்புப் பணிகள் குறித்தும் திரு லீ கேட்டறிந்ததாக சாவ்பாவ் நாளிதழ் தெரிவித்தது.

