வெளிநாட்டில் சிங்கப்பூர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கினால் பணியில் ஈடுபட போக்குவரத்து அமைச்சின் போக்குவரத்துப் பாதுகாப்பு விசாரணைக் குழுவினருக்கு (டிஎஸ்ஐபி) மூன்று மணிநேரம்தான் தேவைப்படுகிறது.
கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எஸ்கியூ321 விமானம் நடுவானில் ஆட்டங்கண்டு அவசரமாக தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் சுவர்னபூமி விமான நிலையத்தில் தரையிரங்க நேரிட்டது. அச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயமடைந்தனர்.
எஸ்கியூ321 பேங்காக் சென்று ஆறே மணிநேரத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்களுக்கான சிறப்பு விமானம் ஒன்றில் டிஎஸ்ஐபி குழுவினர் சுவர்னபூமி விமான நிலையத்தைச் சென்றடைந்தனர். மே 21ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு அவர்கள் சுவர்னபூமி விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்தனர்.
எஸ்கியூ321 குறித்து விசாரணை நடந்துவரும் இவ்வேளையில் டிஎஸ்ஐபி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
முன்னதாக மார்ச் மாதம் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஒன்று அமெரிக்காவின் பால்டிமோர் பாலத்தில் மோதியது. அறுவரை பலிவாங்கிய அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்தும் டிஎஸ்ஐபி குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எஸ்கியூ321 தொடர்பான விசாரணை குறித்த தகவல்களை டிஎஸ்ஐபி வெளியிட மறுத்துள்ளது.
டிஎஸ்ஐபி, சிங்கப்பூரில் நிகழும் ஆகாய, நீர், ரயில் போக்குவரத்து விபத்துகளை மட்டும் கையாளவில்லை. சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களோ கப்பல்களோ வெளிநாடுகளில் விபத்தில் சிக்கனாலும் அது பணியில் ஈடுபடுத்தப்படும்.
வெளிநாட்டில் சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவல் கிடைத்தவுடன், டிஎஸ்ஐபி குழுவினர் முதலில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் இருக்கும் தங்களின் அலுவலகத்தில் ஒன்றுகூடுவர். பிறகு இருவர் அல்லது மூவரைக் கொண்ட விசாரணைக் குழு பணியில் இறக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
விசாரணைக் குழு முடிவானவுடன் மூன்று மணிநேரத்துக்குள் பணி தொடங்க வேண்டும் என்பது இலக்கு என்று டிஎஸ்ஐபியின் தலைமை விசாரணை அதிகாரியும் பயிற்சிப் பிரிவின் தலைவருமான டேவிட் லிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
பாதுகாப்பு விசாரணை அதிகாரியாக 17 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் 59 வயது லிம், தான் எந்த நேரத்திலும் பணியில் ஈடுபடுத்தப்படக்கூடும் என்ற மனப்பான்மையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“எனக்கு என்ன தேவை என்பது எனது மனைவிக்குத் தெரியும்,” என்று சொன்ன திரு லிம், “எனக்கு அழைப்பு வரும்போது எனது காலுறைகள், உள்ளாடைகள், ஜீன்ஸ், டீ-சட்டைகள், கழிவறையில் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்கள் போன்றவற்றை எடுத்துவைக்க வீட்டில் ஆள் இருக்கிறார்,” என்று தனது மனைவி உதவிக்கரம் நீட்டுவதைப் பற்றி விவரித்தார்.
பொதுவாக டிஎஸ்ஐபி குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்குள் அங்கு உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கும். பல நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு டிஎஸ்ஐபி விசாரணையை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.