பூனை வளர்ப்புக்கு உரிமம் பெறவேண்டும் என்னும் புதிய விதிமுறை சட்டவிரோத பூனை வளர்ப்பைக் களை எடுக்கும் என்று விலங்குநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து விலங்கு, பறவை கால்நடை மருந்தகத்தின் நிறுவனர் கென்னத் டோங் கருத்துத் தெரிவித்து உள்ளார்.
“உரிமம் இன்றி பூனைகளை தங்களது வீடுகளில் வளர்ப்போர் விலங்குநலனையோ பொறுப்பான வளர்ப்புக்குரிய தரநிலைகளையோ பின்பற்றுவதில்லை.
“நிதி ஆதாயம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் பூனைகளை அடிக்கடி குட்டிகளைப் போடும் நிலைமைக்கு ஆளாக்குகிறார்கள்.
“பிரசவித்த தாய்ப் பூனைக்குப் போதுமான ஓய்வு அளிப்பதில்லை,” என்றார் அவர்.
ஆனால், பூனை வளர்ப்புக்கு உரிமம் பெறவேண்டும் என்ற விதிமுறை செப்டம்பர் மாதம் அறிமுகம் கண்ட பின்னர் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்கள் குறையக்கூடும் என்று அவரைப் போன்ற விலங்குநல ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
பூனை பராமரிப்பு கட்டமைப்பு என்னும் புதிய விதிமுறை பூனைகளின் நல்வாழ்வை மேம்படுத்த முயலும்.
வீடமைப்புக் கழக வீடுகளில் அதிகபட்சமாக இரண்டு பூனைகளும் தனியார் குடியிருப்புகளில் மூன்று பூனைகளும் மட்டுமே வளர்க்க அனுமதிக்கப்படும். அத்துடன் பூனை வளர்ப்புக்கு உரிமம் பெற வேண்டும். பூனைகளிடம் நுண்சில்லுகளைப் பொருத்த வேண்டும்.

