சிங்கப்பூர்க் குடியரசின் ஆகாயப் படை விமானம் எஃப்-16 விழுந்து நொறுங்கியதற்கு, சிதைந்த பாகங்களே காரணம் என்று தற்காப்பு அமைச்சு தெரிவித்து உள்ளது.
வருங்காலத்தில் அதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க, விமானப் பாகங்கள் சரியாக உள்ளனவா என்பதை முன்கூட்டியே உறுதிசெய்யும் வகையில் கூடுதல் பராமரிப்புச் சோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
தெங்கா ஆகாயப் படைத்தளத்தில் கடந்த மே 8ஆம் தேதி நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான விசாரணை முடிவுற்ற நிலையில் அமைச்சு இதனை வெளியிட்டு உள்ளது.
அந்த விபத்தில் விமானி உயிர்தப்பினார்.
விமானத்தைக் கட்டுப்படுத்த, ‘ஜைரோஸ்கோப்’ எனப்படும் கருவியை விமானக் கட்டுப்பாட்டுக் கணினி பயன்படுத்துகிறது.
அதுபோன்ற நான்கு கருவிகள் எஃப்-16 ரக விமானத்தில் இருந்தன.
விமானம் மேல்நோக்கிப் பறக்கத் தொடங்கியபோது அதில் ஒரு கருவி தவறான தகவலைத் தந்ததன் காரணமாக விமானியால் விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாக மே 18ஆம் தேதி அமைச்சு கூறி இருந்தது.
விபத்துக்குப் பின்னர் தெங்கா ஆகாயப் படைத்தளத்தில் எஃப்-16 போர் விமானப் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. விசாரணை முடிவுகள் வெளியான பின்னர் பயிற்சிகள் மீண்டும் தொடங்கின.

