சிங்கப்பூரில் ஆகப் பெரிய சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இதுவரை 10 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், மற்ற சொத்துகள் தொடர்பாக இதுவரை எந்த வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்தோ அல்லது அமைப்புகளிடம் இருந்தோ கோரிக்கை வரவில்லை என்று உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
இதில், $944 மில்லியன் பெறுமானமுள்ள ரொக்கம், மற்ற சொத்துகள் தொடர்பாக இதுவரை ஒருவருக்கு ஒருவர் போட்டியாக அடிப்படையில் எவரும் கோரிக்கை வைக்கவில்லை என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஸுவெலிங் தெரிவித்தார்.
இது குறித்து பாட்டாளி கட்சி தலைவர் சில்வியா லிம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2ஆம் தேதி) அன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
குற்றம் புரிந்ததாக தண்டிக்கப்பட்ட வெளிநாட்டினர் 10 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதில் சொகுசு கார்கள், கைப்பைகள், ஆபரணங்கள் ஆகியவை அடங்கும்.
பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் தொடர்பாக பேசிய திருவாட்டி சுன் இந்த சொத்துகள் மீது உரிமை இருப்பதாக எண்ணும் வெளிநாட்டு அரசுகள் இருதரப்பு சட்ட உதவிக்கு முறையாக கோரிக்கை வைக்கலாம் என்றார்.
இதில் சொத்துகள் எங்கிருந்து வந்தன என்பது குறித்து சிங்கப்பூருடன் தகவல் பகிர்ந்துகொள்வது, ஒவ்வொரு சொத்து தொடர்பாக தகுதி அடிப்படையில் அவற்றை திரும்பப் பெறுவது போன்றவை அடங்கும் என்று அவர் விளக்கினார்.

