தங்களது குழந்தைப் பருவத்தில் மோசமான அனுபவங்களை அனுபவித்தவர்களால் சிங்கப்பூருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய $1.18 பில்லியன் இழப்பு ஏற்படக்கூடும் என்று தெரிய வந்துள்ளது.
உணர்வுபூர்வ நிராகரிப்பு, பெற்றோரின் மரணம் அல்லது பிரிந்திருத்தல் போன்ற அனுபவங்களைச் சந்தித்தவர்களிடம் உற்பத்தித்திறன் குறைவாக இருப்பதோடு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளும் அவர்களுக்குத் தேவைப்படும்.
மனநலக் கழகமும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையும் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்தன.
சிங்கப்பூரில் மோசமான குழந்தைப் பருவ அனுபவத்தால் ஏற்படும் பொருளியல், சமூக பாதிப்புகள் என்னும் கருத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒருவரின் முதல் 18 ஆண்டுகளில் ஏற்படும் மோசமான சம்பவங்களின் தாக்கம் அவரது வாழ்க்கை முழுவதும் தொடரும்.
அத்துடன், அதிகமான சுகாதாரப் பராமரிப்புச் செலவுக்கு அது இட்டுச் செல்லும். பாதிக்கப்பட்டோர் வேலை செய்யும் இடத்தில் அவரால் குறைவான உற்பத்தித்திறனையே வெளிப்படுத்த இயலும் என்பனவற்றை ஆய்வு கண்டறிந்தது.
இந்த விவரங்களை உள்ளடக்கிய ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) வெளியிடப்பட்டது.
மோசமான குழந்தைப் பருவ அனுபவத்தால் சிங்கப்பூர் மக்கள்தொகையில் ஏற்படக்கூடிய பொருளியல் தாக்கத்தை அறிய நடத்தப்பட்ட முதல் ஆய்வு இது என்று மனநலக் கழக மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவின் உதவித் தலைவர் டாக்டர் மைத்திலி சுப்பிரமணியம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
குழந்தையாக இருக்கும்போது தமக்கு நேர்ந்த ஒரே ஓர் அனுபவத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் சுகாதாரப் பராமரிப்புக்கும் உற்பத்தித்திறன் இழப்புக்கும் சேர்த்து ஆண்டுக்கு $767 செலவாகும்.
அதுவே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புகளைச் சந்தித்தவரால் சிங்கப்பூருக்கு ஆண்டுக்கு $2,168 செலவாகும் என்பது ஆய்வில் தெரிய வந்தது.