முதுகெலும்பு அறுவை சிகிச்சை பெரும்பாலும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையிலிருந்து நோயாளிகள் முழுமையாகக் குணமடைய ஆறு மாதங்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை நிபுணர்கள், நோயாளிகளின் முதுகில் ஒரு பெரிய கீறலை உருவாக்கி, தசை, மென்மையான திசுக்கள் ஆகியவற்றை வெட்டி இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர்.
ஆனால், அண்மையில் இந்த அறுவை சிகிச்சை இயந்திர மனிதன் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
முதுகில் சிறிய துளையிட்டு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், மூத்தோர்க்கு இந்தச் சிகிச்சையின்போது ஏற்படும் வலியை இது குறைக்கிறது.
மேலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இது சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.
2021ஆம் ஆண்டு, இயந்திர மனிதன் உதவியுடன் முதுகெலும்புக்காக வடிவமைக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கிட்டத்தட்ட 120 முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் டான் டோக் செங் மருத்துவமனையில் நடத்தப்பட்டதாக அந்த மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் மூத்த ஆலோசகரும் தலைவருமான இணைப் பேராசிரியர் ஜேக்கப் ஓ ஜூலை 16ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், இந்த அறுவை சிகிக்சை முடிந்தபின் நோயாளிகள் மருத்துவமனையில் இரண்டு நாள்களுக்குக் குறைவாகத் தங்கினால் போதும் என்று அவர் கூறினார்.
இயந்திர மனிதன் உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சையில் 30 விழுக்காட்டுக்கும் குறைவான ரத்த இழப்பு ஏற்படுவதாகவும் டாக்டர் ஓ தெரிவித்தார்.

