அங் மோ கியோவில் உள்ள ஒரு வீவக வீட்டில் வியாழக்கிழமை தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்த 30 பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 612 அங் மோ கியோ அவென்யூ 4ல் தீப்பற்றி எரிவதாக பின்னிரவு 2 மணிக்கு தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
புளோக் 612ன் 11வது மாடியில் இருந்த அந்த வீட்டின் படுக்கை அறையில் மூண்ட தீயை தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
குடிமைத் தற்காப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அந்த வீட்டில் இருந்த ஐந்து பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்களில் இருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையிலும் இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இன்னொருவர் மருத்துவமனைக்கு வர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புக் கருதி அந்த புளோக்கிலிருந்து கிட்டத்தட்ட 30 பேரை காவல்துறையினரும் குடிமைத் தற்காப்புப் படையினரும் சேர்ந்து வெளியேற்றினர்.
தீச்சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், படுக்கை அறையில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறே காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. அதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

