முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி, முன்னர் வேலை செய்த சட்ட நிறுவனத்தின் சேவைகளை நாடியோர் ஒட்டுமொத்தமாகக் கொடுத்த 120,000 வெள்ளித் தொகையை அவர்களிடம் திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்களுக்காக வாதிடுமாறு ரவியை நாடியோர், அவர் முன்பு வேலை செய்த ‘கே. கே. செங் லா’ எனும் சட்ட நிறுவனத்திடம் அத்தொகையைக் கொடுத்தனர். அந்த நிறுவனம், அத்தொகையை ரவியிடம் கொடுத்தது.
மருத்துவர்கள் உட்கொள்ளுமாறு சொன்ன மனநல மருந்தை உட்கொள்ளாததால் வழக்கறிஞராகப் பணியாற்ற ரவிக்குத் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாங்கள் செலுத்திய கட்டணத்தைத் திரும்பத் தரவேண்டும் என்று சம்பந்தப்பட்டோர் ‘கே. கே. செங் லா’ மீது வழக்கு தொடுத்தனர்.
அதனையடுத்து அந்நிறுவனம், தான் கொடுத்த தொகையை ரவி திருப்பித் தரவேண்டும் என்று சிவில் வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கில் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 21) அச்சிடப்பட்ட தீர்ப்பில் மாவட்ட நீதிபதி சியா கொக் குன், ரவி அந்தத் தொகையை நிறுவனத்திடம் திருப்பித் தரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
‘கே. கே. செங் லா’விற்கு ரவி அனுப்பிய மின்னஞ்சலில், அதற்குத் தான் பொறுப்பேற்பதாகவும் அந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பைத் தான் ஈடுகட்டப்போவதாகவும் குறிப்பிட்டார் என்று நீதிபதி சியா தெரிவித்தார்.

