ஆண்டிறுதியில் பல மலிவு விற்பனைகள் நடந்தாலும் பொருள் விநியோகம் தொடர்பான மோசடிச் சம்பவங்களும் அதிகரிக்கக்கூடும் என்று இணையத்தில் பொருள் வாங்குவோரைக் காவல்துறை எச்சரித்துள்ளது.
மோசடிக்காரர்கள் ‘சிங்போஸ்ட்’ உட்பட பலரும் அறிந்திருக்கும் பெயர்களில் ஏமாற்றக்கூடும் என்று கூறப்படுகிறது.
குறைந்தது 631 மோசடிச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் புகார் செய்யப்பட்டதாகவும் மோசடிக்கு ஆளானோர் குறைந்தது $1.1 மில்லியன் இழந்துள்ளதாகவும் காவல்துறையினர் நவம்பர் 22ஆம் தேதி வெளியிட்ட அறிவுறுத்தல் குறிப்பில் தெரிவித்தனர்.
இந்த எண்ணிக்கையில் சிங்போஸ்ட் பெயரில் நடந்த ஆள்மாறாட்டம் குறைந்தது 505 என்றும் குறைந்தது $955,000ஐ பாதிக்கப்பட்டோர் இழந்தனர் என்றும் கூறப்படுகிறது.
விநியோகத்துக்கான பொருளை அனுப்ப முடியவில்லை என்று குறிப்பிட்டு ஓர் இணையத்தள இணைப்பைச் சொடுக்குமாறு அமைந்த குறுந்தகவல் கிடைத்ததை அடுத்து, அதைச் சொடுக்குவோர் தங்களின் முகவரியை உறுதிப்படுத்த கோரப்படுவர். ஆனால், அதில் கடன் அட்டை விவரங்களை உள்ளீடு செய்யுமாறு கேட்கப்படும்.
இதையடுத்து, அந்தக் கடன் அட்டை விவரங்களை மோசடிக்காரர்கள் பொருள் வாங்குதலுக்குப் பயன்படுத்திக்கொள்வர். வங்கிக் கணக்கு அல்லது கடன் அட்டை பரிவர்த்தனைகளைப் பார்த்த பின்னரே தாங்கள் மோசடிக்கு ஆளானதைப் பாதிக்கப்பட்டோர் உணர்ந்தனர்.

