சிங்கப்பூரில் இசைக் கலையையும் கலைஞர்களையும் தமிழ் முரசு வளர உதவியது, இன்றும் உதவுகிறது.
தமிழ் முரசு இசைக் கலைக்குக் கொடுத்த ஆதரவு 1950கள் வரை பின்னோக்கிச் செல்கிறது. சிங்கப்பூரில் பிரபல நடனக் கலைக் குழுக்களில் ஒன்றான பாஸ்கர்ஸ் கலைக் கழகம் (Bhaskar’s Arts Academy) அதற்கு ஒரு சிறந்த சான்று.
“எத்தனையோ மேடை நிகழ்ச்சிகளைப் படைத்தபோது தமிழ் முரசு நல்ல ஆதரவு தந்தது. மேடை நிகழ்ச்சிகளுக்கு முன் செய்தியாளர்கள் எங்களை நேரில் வந்து பேட்டி கண்டு எங்கள் படைப்பு பற்றிய செய்தியைத் தொகுத்து வழங்கும்வது பலரிடம் அதைக் கொண்டு சேர்க்க நிச்சயம் உதவியது,” என்றார் பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தின் நிறுவன நிர்வாகி திருவாட்டி தவ ராணி மோகன்.
தமிழ் முரசில் பாஸ்கர்ஸ் கலைக் கழகம் பற்றி வரும் செய்திகள் எங்களைப் பற்றிய அறிமுகத்தை பலருக்குத் தந்தது என்றார் அவர்.
1952ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த திரு கிருஷ்ணன்பிள்ளை பாஸ்கர் சிங்கப்பூரில் கால் வைத்தார். அதையடுத்து இங்கேயே இருந்துவிட்ட அவர், சிங்கப்பூரின் முதல் இந்திய நாட்டிய ஆசிரியரானார். அதிலிருந்து பாஸ்கர்ஸ் கலைக் கழகமும் பிறந்தது.
“1958ஆம் ஆண்டு திரு பாஸ்கரின் மனைவி திருவாட்டி சாந்தா பாஸ்கர் நடனமைத்து மேடையேற்றிய முதல் படைப்புக்குத் தமிழ் முரசு கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. பல இன நடனக் கலைஞர்களுடன் மேடையேறியது ‘பட்டர்ஃபிலாய் லவர்ஸ்’ (Butterfly Lovers) என்ற நாட்டிய நாடகம்,” என்ற திருவாட்டி தவ ராணி, அப்போதுதான் திருவாட்டி சாந்தா பாஸ்கர் முதல் அரங்கேற்றத்தையும் சிங்கப்பூரில் நடத்தியதைக் குறிப்பிட்டார்.
இதுபோன்று காலத்தால் அழியாத அரிய தகவல்களை இன்றும் கண் முன் நிறுத்தும் பொறுப்பைத் தமிழ் முரசு மிகச் சரியாக ஏற்று நடத்துக்கிறது என்றார் திருவாட்டி தவ ராணி.
தமிழ் முரசு மூலம் வெளிச்சத்துக்கு வந்த எத்தனையோ மறக்கப்பட்ட கலைகளில் தெருக்கூத்தும் ஒன்று என்றார் திருவாட்டி தவ ராணி. “2017ஆம் ஆண்டு நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் நடைபெற்ற தெருக்கூத்துக்கு மீண்டும் உயிர்கொடுத்தது தமிழ் முரசு. விக்டோரியா மேடையில் அதற்கான தளத்தைத் தமிழ் முரசு அமைத்துக் கொடுத்ததுதான் சிறப்பு,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த வாய்ப்புக்குப் பின் பல இடங்களில் மீண்டும் தெருக்கூத்து அரங்கேறியதையும் திருவாட்டி தவ ராணி குறிப்பிட்டார்.
பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தைப் போல சிங்கப்பூரில் முத்திரை பதித்த அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளிக்கும் பல வகையில் துணைபுரிந்தது தமிழ் முரசு.
1977ஆம் சிங்கப்பூரில் நடைபெற்ற கலைகள் விழாவில் சிறந்த படைப்புக்கான விருதை வென்ற அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைப்பள்ளி அப்போது தொடங்கப்பட்டது. அதுபோன்ற பல மைல்கற்களை இன்றுவரை தமிழ் முரசில் காண முடிகிறது என்றார் அப்சராஸ் கலைப்பள்ளியின் கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்துக்கும் தமிழ் முரசு உறுதுணையாக இருந்ததைக் குறிப்பிட்டார், கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழகத்தின் முதல்வராகச் சேவையாற்றிய திரு சங்கர் ராஜன்.
“தனிப்பட்ட வகையிலும் என் கலை வளர்வதற்குத் தமிழ் முரசு ஒரு காரணம். 11 வயதிருக்கும்போது சிங்கப்பூரில் மேடையேறிய என் மிருதங்க அரங்கேற்றத்திற்கு தமிழ் முரசை நிறுவிய கோ சாரங்கபாணி நேரில் வந்து சிறப்பித்தார்,” என்று நினைவுகூர்ந்த திரு சங்கர், தமிழ் முரசில் வெளிவந்த எத்தனையோ செய்திகள் தம்மைப் போன்ற கலைஞர்களுக்குத் தொடர்ந்து அங்கீகாரம் கொடுத்து வந்திருப்பதைக் குறிப்பிட்டார்.
1952ஆம் ஆண்டு இரண்டு வயது திரு சங்கர் சிங்கப்பூருக்குப் பெற்றோருடன் வந்தார். 1950களிலிருந்து 1970கள் வரை திரு சங்கரின் தாயார் திருவாட்டி சாரதா ராஜன் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளும் இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளில் பாடுவது வழக்கம்.
“அதையெல்லாம் தமிழ் முரசு அப்போது செய்தியாக வெளியிட்டது நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது,” என்ற திரு ராஜன், தமிழ் முரசு காலத்தால் அழியாத பொக்கிஷம் என்று வருணித்தார்.
எந்த ஒரு கலை நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடைப் படைப்பாக இருந்தாலும் தமிழ் முரசை அங்கு காண முடிந்தது என்ற திரு சங்கர், பல மாணவர்களின் அரங்கேற்றங்கள் பற்றிய செய்தியும் தமிழ் முரசில் இடம்பெற்றது அவர்களின் கலைப்பயணத்துக்குச் சிறந்த தூண்டுகோலாக இருந்தது என்றார்.
ஆறு வயதிலிருந்து புல்லாங்குழல் வாசித்துவரும் முனைவர் கானவினோதன் ரத்னம், “சிறிய நிகழ்ச்சியோ, பெரிய நிகழ்ச்சியோ தமிழ் முரசு அதற்கென ஓர் இடம் ஒதுக்காமல் இருந்ததில்லை,” என்றார்.
நிகழ்ச்சிகளுக்கு முன் வரும் விளம்பரங்கள், நிகழ்ச்சிகளுக்குப் பின் வரும் விமர்சனங்கள் போன்றவை தனிப்பட்ட கலைஞர்களுக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளது என்றார் அவர்.
“சிங்கப்பூரின் உயரிய கலாசாரப் பதக்கத்தைப் பெற்றபோது தமிழ் முரசு அதை முதல் பக்கத்தில் அச்சிட்டது. தமிழ் முரசு எந்த அளவுக்குக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை அதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது,” என்றார் முனைவர் கானவினோதன்.

