சிங்கப்பூர் ஆயுதப் படை மருத்துவப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர் டாங் கொங் சூங், ஏப்ரல் 1ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
டாக்டர் டாங், 2015ஆம் ஆண்டுமுதல் அந்தப் பதவியில் இருக்கும் பேராசிரியர் யூஜீன் ஃபிடெலிஸ் சோவிடம் இருந்து அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
டாக்டர் டாங் 2020ஆம் ஆண்டு டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்ந்து, மயக்கவியல், தீவிர பராமரிப்பு, வலி மருந்துப் பிரிவில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.
டான் டோக் செங் மருத்துவமனையின் தீவிர பராமரிப்புப் பிரிவின் தலைமையகத்தை நிறுவுதல், அவசரச் சூழ்நிலையில் திட்டமிடுதல், கொவிட்-19 கிருமிப்பரவலின்போது செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியதாக அறிக்கை கூறியது.
2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து, அவர் மருத்துவமனையின் உதவித் தலைமை நிர்வாகியாகச் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் துணைத் தலைமை நிர்வாகியானார்.
இந்நிலையில், பேராசிரியர் சோ, ஏப்ரல் 1ஆம் தேதி தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தில், மக்கள்தொகை சுகாதாரப் பிரிவின் குழுமத் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.