பிடோக் சென்ட்ரலில் மேற்கொள்ளப்பட்ட காசநோய்ப் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன.
ஒருவருக்குக் காசநோய்ப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தொற்றுநோய்த் தடுப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை (மே 19) தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர் தற்போது சிகிச்சையைத் தொடங்கியுள்ளதாகவும் அவரது உடல்நிலை தேறிவருவதாகவும் கூறப்பட்டது.
இரு வாரக் கால சிகிச்சையை நிறைவு செய்த பின்னர், அவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கிருமி பரவும் அபாயம் இருக்காது என அமைப்பு குறிப்பிட்டது.
அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அது கூறியது.
மே 2ஆம் தேதி முதல், ஹார்ட்பீட்@பிடோக், புளோக் 216 பிடோக் உணவு நிலையம், சந்தை, சிங்கப்பூர் பூல்சின் பிடோக் பந்தய நிலையம் ஆகிய பகுதிகளுக்கு வழக்கமாகச் சென்று வந்தோர், ஊழியர்கள், வாடகைதாரர்கள் என மொத்தம் 3,525 பேருக்குக் காசநோய்ப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 509 பேருக்குக் காசநோய்க்கான ரத்தப் பரிசோதனை முடிவு சாதகமாக வந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக நெஞ்சுப் பகுதியில் ஊடுகதிர்ப் பரிசோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டனர்.
அந்தப் பரிசோதனையை நிறைவு செய்த 447 பேரில், ஒருவருக்கு காசநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மீதமுள்ள 42 பேருக்கு காசநோய்ப் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், அவர்களின் ஊடுகதிர்ப் பரிசோதனை முடிவில் சில சிறிய அசாதாரணக் கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அவர்கள் தேசிய காசநோய்ப் பராமரிப்பு நிலையத்தில் உயர்மட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர்.

