புக்கிட் தீமா, டன்யர்ன் ரோடுகளின் ஒரு பகுதியைத் தற்காலிகமாக மூடத் திட்டமிடப்பட்டிருந்தது.
தேசிய நீர் முகவையான பொதுப் பயனீட்டுக் கழகம் இப்போது அத்திட்டத்தை ஒத்திவைத்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பாதசாரி மேம்பாலத்தை அகற்றுவதற்காக சாலைப் பகுதியை மூடத் திட்டமிடப்பட்டது.
ஜாலான் ஜம்பு அயர் பகுதிக்கு அருகே மேம்பாலத்தை அகற்றும் பணிகளை ஏப்ரல் 25, 26ஆம் தேதி அதிகாலை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. அப்பணிகளுக்கான காலகட்டத்தில் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதால் சாலை மூடல் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பொதுப் பயனீட்டுக் கழகம் வியாழக்கிழமை (ஏப்ரல் 24) ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து அந்த இரு நாள்களிலும் அதிகாலை 12.30 முதல் ஆறு மணி வரை காஸ்கேடியா கொண்டோமினியத்திலிருந்து தி நெக்சஸ் கொண்டோமினியம் வரையிலான புக்கிட் தீமா ரோடு பொதுமக்களுக்குத் திறந்திருக்கும். அதேநேரத்தில் பிஞ்ஜாய் பூங்கா, ஜாலான் ஜம்பு ஆயர் ஆகியவற்றுக்கு இடையிலான டன்யர்ன் ரோடு பகுதியும் பொதுமக்களுக்குத் திறந்திருக்கும்.
இந்த மாற்றத்தால் ஏற்படக்கூடிய அசெளகரியத்துக்குப் பொதுப் பயனீட்டுக் கழகம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. மேம்பாலத்தை அகற்றும் பணிகளுக்கான புதிய தேதிகள் குறித்து பின்னர் மேல்விவரங்கள் வழங்கப்படும் என்று கழகம் குறிப்பிட்டது.