வாஷிங்டன்: மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து இரண்டாம் வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த தனக்கு விருப்பமில்லை என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 7) ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானின் ராணுவக் கட்டமைப்பும் அரசியல் தலைமைத்துவமும் முழுமையாக முறியடிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்றார்.
‘நாங்கள் சரணடைகிறோம்‘ என்று சொல்வதற்குக் கூட ஈரானில் எவரும் மிஞ்சியிருக்க மாட்டார்கள் என்று ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் மீதும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்தால், அது பலமுறை மாற்றப்பட்டு நிச்சயமற்ற நிலையிலேயே நீடிக்கின்றது.
ஈரானின் புரட்சிப் பாதுகாப்புப் படை (IRGC) தங்களால் குறைந்தது ஆறு மாதங்களுக்குத் தீவிரமான போரைத் தொடர முடியும் என்பதை நிரூபிக்க, வட்டாரத்திலுள்ள 200க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அனைத்துலக அளவில் இந்த மோதல் பெரும் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் ஸ்டார்மர் ஆரம்பக்கட்டத் தாக்குதல்களில் இணையாத நிலையில், “நாங்கள் ஏற்கனவே வென்ற போர்களில் இணைய பிரிட்டன் முயல்கிறது” என்று ட்ரம்ப் விமர்சித்ததோடு, பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்கள் தங்களுக்குத் தேவையில்லை என்றும் கூறினார்.

