பாசிர் பாஞ்சாங் முனையத்தில் விநியோகப் படகு ஒன்று மூழ்கியதில் மூவர் மாண்டனர்.
வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நீர்ப்படைக் கலம் ஒன்றின்மீது மோதிய அந்தப் படகு காலை 9.30 மணியளவில் மூழ்கியதாகச் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் அறிக்கை வெளியிட்டது.
ஆணையம், காவல்துறையின் கடலோரக் காவற்படை, சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் கடல்துறைப் பிரிவு ஆகியவை தேடல் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
மூழ்கிய படகில் இருந்த மூவரும் படகின் ஊழியர்கள் என்று நம்பப்படுகிறது. 38லிருந்து 53 வயதுக்கு இடைப்பட்ட அவர்கள், பாசிர் பாஞ்சாங் கப்பல்துறை மேடைக்கு அருகே நீரிலிருந்து மீட்கப்பட்டனர்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை உதவி மருத்துவர்கள், மூவரும் மாண்டதை உறுதிப்படுத்தினர்.
நீர்ப்படைக் கலத்தில் உள்ள ஊழியர்களுக்கு எந்தக் காயமும் இல்லை என்று ஆணையம் தெரிவித்தது. துறைமுகப் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை.
சம்பவ இடத்துக்கு அருகே வரவேண்டாம் என்று கப்பல்களுக்குத் தகவலும் அனுப்பப்பட்டது.

