சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட மூன்று மலேசியர்களைச் சிங்கப்பூரின் கரையோரக் காவற்படை (ஏப்ரல் 19) கைதுசெய்துள்ளது. அவர்கள் 28 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அந்த மூன்று ஆடவர்களும் வடமேற்குக் கடற்பகுதியில் சிறிய படகு மூலம் சிங்கப்பூருக்குள் வர முயன்றனர்.
சிங்கப்பூரின் எல்லைக்கு உட்பட்ட சரிம்பான் தீவுக்கு அருகே அந்த மூன்று ஆடவரும் பயணம் செய்த படகை ஏப்ரல் 18ஆம் பிற்பகல் 2 மணி வாக்கில் கடலோரக் காவற்படை அதிகாரிகள் கண்டனர்.
அதிகாரிகள் படகை நெருங்கியபோது அது மலேசியாவை நோக்கி விரைந்துசென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடலோரக் காவற்படை அதிகாரிகள் படகைத் துரத்தியபோது ஆடவர்கள் ஆபத்தான முறையில் அதை ஓட்டினர். அதோடு சிங்கப்பூர்ப் படகின்மீது இரண்டு முறை மோதிய பிறகு படகை ஆடவர்கள் நிறுத்தினர்.
படகிலிருந்த இரண்டு மலேசியர்களும் கடலில் விழுந்து பின் மீண்டும் படகில் ஏறியதை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேக ஆடவரைத் துரத்தியதில் கடலோரக் காவற்படை அதிகாரி ஒருவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

