அமெரிக்க வர்த்தகரை மோசடியில் ஏமாற்றிய மூன்று இளையர்கள் கைது

அமெரிக்க வர்த்தகரை மோசடியில் ஏமாற்றிய மூன்று இளையர்கள் கைது

2 mins read
வங்கி ஊழியர்கள் காவல்துறையுடன் இணைந்து மோசடியைத் தடுத்துள்ளனர்
d38c8d1e-67e2-408f-81f8-2f0f7371c5b8
இணையக் குற்றவாளிகள் நிறுவனத்தின் நிர்வாகிகள், சேவை வழங்குநர்கள், ஊழியர்கள் போல ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல் மோசகளில் ஈடுபடுகின்றனர். - படம்: சாவ்பாவ் சீன நாளிதழ்

சிங்கப்பூரில் S$3.7 மில்லியன் (US$2.89 மில்லியன் ) மதிப்பிலான வணிக மின்னஞ்சல் மோசடிகளில் தொடர்புடைய ஒரு மலேசியர் உட்பட மூன்று இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

அந்த 16, 19 வயதான இரு சிங்கப்பூரர்களும் மற்றொரு 19 வயது மலேசிய இளைஞரும் மலேசிய மோசடிக் கும்பலுடன் இணைந்து, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் போலி நிறுவனங்களைத் தொடங்கி டிபிஎஸ் (DBS) வங்கிக் கணக்குகளையும் ஆரம்பித்துள்ளனர்.

அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்றை ஏமாற்றி இந்த வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியுள்ளனர். ஏப்ரல் 22ஆம் தேதி S$ 3.5 மில்லியனைத் (US$2.56 மில்லியன்) திரும்பப் பெற முயன்றபோது, சந்தேகமடைந்த வங்கி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விழிப்புநிலையில் இருந்த வங்கி ஊழியர்களின் தகவலின் பேரில் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) அந்த மூன்று இளையர்களும் காவல்துறையால் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

19 வயதுடைய இருவர் மீதும் சனிக்கிழமை (ஏப்ரல் 25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது $500,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

16 வயது சிறுவனிடம் விசாரணை தொடர்கிறது. மோசடி குற்றங்களில் ஈடுபடுவோருக்குக் கட்டாயமாக 6 முதல் 24 பிரம்படிகள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மின்னஞ்சல் மோசடியில் மீதமுள்ள பணம் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.

சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி தடுப்பு ஆணையத்தின் அதிகாரிகள் இன்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறையிடம் இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்தனர். அந்த அமைப்பு மோசடிக்கு ஆளான அமெரிக்க நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை அதிகாரியிடம் விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.

இணையத்தில் செயல்படும் மோசடிக் கும்பல்

இணையத்தில் வலம் வரும் குற்றவாளிகள், நிறுவனங்களை ஏமாற்ற நிர்வாகிகள், ஊழியர்கள், விநியோகஸ்தர்கள் போல ஆள்மாறாட்டம் செய்து, மின்னஞ்சல் மோசடியை மேற்கொள்கின்றனர்.

இந்தக் குறிப்பிட்ட வழக்கில் வர்த்தக மின்னஞ்சல் மோசடி பற்றிய முழு விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்