ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது குடையை எடுத்துச்செல்வது நல்லது என்கிறது சிங்கப்பூர் வானிலை ஆய்வுக்கழகம். அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான நாள்களில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்று அது கூறுகிறது.
காலை பின்னேரத்திலும் பிற்பகலிலும் தீவின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுக்கழகம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) சொன்னது. அதிகாலையில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அல்லது தென்மேற்குப் பகுதியிலிருந்து காற்று வீசக்கூடும் என்றும் கூறப்பட்டது.
பெரும்பாலான நாள்களில் அன்றாட அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியசுக்கும் 34 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் பெரும்பாலும் மிதமான வெப்பம் இருந்தது. சில நாள்கள் இடியுடன் கூடிய மழை பெய்தது. அன்றாட அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான நாள்களில் 33 டிகிரி செல்சியசைத் தாண்டியது.
சில இரவுகளில் குறிப்பாகத் தீவின் கிழக்கு, தெற்கு, மேற்கு வட்டாரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசுக்கும் மேல் இருந்தது.