சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக மேலும் கடுமையான சட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
இரண்டு ஆண்டுகளில் அது தொடர்பான சம்பவங்கள் நான்கு மடங்கு அதிகரித்தன.
நாடாளுமன்றத்தில் மார்ச் 7ஆம் தேதி முதல் முறையாக சட்ட அமலாக்க, மற்ற விவகாரங்கள் தொடர்பான மசோதா வாசிக்கப்பட்டது.
குற்றச் செயலுக்காக உள்ளூர் சிம் அட்டைகளைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுப்போருக்கு எதிராக காவல்துறை மேலும் கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மோசடிகளிலும் மற்ற இணையக் குற்றங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளூர்க் கைப்பேசி எண்களின் எண்ணிக்கை 2021ல் இருந்த 5,867லிருந்து 2023ல் 23,519க்கு அதிகரித்தது.
அத்தகைய சம்பவங்களில் இழந்த தொகை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்தது. 2021ல் $137 மில்லியனாக இருந்த அந்தத் தொகை, 2023ல் $384 மில்லியனாக அதிகரித்தது.
தங்கள் சிம் அட்டைகளையோ, சிம் அட்டைகளுக்கு விண்ணப்பிக்க தங்கள் விவரங்களையோ மற்றவர்களிடம் கொடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் காவல்துறை சிரமங்களை எதிர்நோக்குவதாக உள்துறை அமைச்சு தெரிவித்தது.
‘பொறுப்பற்ற பதிவாளர்கள்’ என்று அமைச்சால் அழைக்கப்படும் அத்தகையோர் வழக்கமாக தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறுகின்றனர். அவர்களுக்கு எதிராக அதிகாரிகளால் வழக்கு தொடுக்க முடிவதில்லை.
தற்போதைய சட்டங்களின்கீழ், இத்தகைய பொறுப்பற்ற பதிவாளர்கள் சட்ட விரோத நோக்கங்களுக்காக தங்களின் சிம் அட்டைகளைக் கொடுத்திருப்பதையோ, தங்கள் சிம் அட்டைகள் குற்றச்செயலுக்காகப் பயன்படுத்தப்படபோவது தங்களுக்குத் தெரிந்திருப்பதையோ காவல்துறை நிரூபிக்க வேண்டும்.
‘பேநவ்’ வழியாக மோசடிப் பணத்தைப் பெறுவதற்கு மோசடிக்காரர்கள் உள்ளூர்க் கைப்பேசி எண்களைப் பயன்படுத்திவருவதாக அமைச்சு கூறியது.
சென்ற ஆண்டு மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் $651.8 மில்லியன் இழந்தனர். அதோடு, முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில், 46,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் குறித்து புகார்களும் செய்யப்பட்டன.