சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், ‘சன்ஷைன் டுவர்ஸ் அண்ட் டிராவல்’ நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகப் புதன்கிழமை (டிசம்பர் 31) தெரிவித்துள்ளது.
தணிக்கை செய்யப்பட்ட கணக்கறிக்கை, வருடாந்தர நிதியறிக்கை ஆகியவற்றை அந்நிறுவனம் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகக் கழகம் கூறியது. அதனால் சுற்றுப்பயண முகவை நடவடிக்கைகளை 6 மாதங்களுக்கு மேற்கொள்ள இயலாத வகையில் அதன் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற சுற்றுப்பயண முகவர்கள் இந்த ஆவணங்களை, நிதியாண்டு முடிந்து ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்பதைக் கழகம் சுட்டியது.
‘சன்ஷைன் டுவர்ஸ் அண்ட் டிராவல்’ நிறுவனத்தின் உரிமம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. நிறுவனம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் வரையில் அல்லது அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரையில் அது நடப்பில் இருக்கும்.
உரிமம் ரத்து செய்யப்பட்ட காலகட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சேவைகளை வழங்கலாம். ஆனால் புதிய சுற்றுப்பயண முன்பதிவுகளை ஏற்க அனுமதி இல்லை.
உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும்போது புதிய முன்பதிவுகளை ஏற்கும் சுற்றுப்பயண நிறுவனங்கள் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் கூறியது.

