சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தின் உணவுப் பட்டியலில் ஒரு பாரம்பரிய மலாய் பலகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
கம்பத்துக் காலத்தை நினைவுப்படுத்தும் ‘பூளுட் பாங்காங்’ (Pulut Panggang) பலகாரத்தை நீ சூன் வட்டாரவாசிகள் உற்சாகத்தோடு சேர்ந்து வாட்டினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ஒன்றுதிரண்டு வந்து 9.2 மீட்டர் நீளத்தில் 300 பூளுட் பாங்காங் துண்டுகளை வாட்டிச் சாதனை படைத்தனர்.
சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற ‘பூளுட் பாங்காங்’ துண்டுகள் ஜோகூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 7ஆம் தேதி) கொண்டு வரப்பட்டன.
நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்துறை, சட்ட அமைச்சருமான திரு கா. சண்முகம் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
அவர் நீ சூன் வட்டாரத்தின் நோன்புப் பெருநாள் சந்தையையும் தொடங்கிவைத்தார்.
அதே குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிமும் சந்தைக்கு வருகை தந்தார்.
நீ சூன் ரமலான் சந்தையில் இவ்வாண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வீட்டிலிருந்தவாறு வர்த்தகம் செய்யும் பலரின் கடைகள், இவ்வாண்டு சந்தையில் அதிகரித்துள்ளதை திரு ஃபைஷால் குறிப்பிட்டார்.
பல்லின மக்கள் சந்தைக்கு வருவது நீ சூன் வட்டாரத்தின் கம்பத்து உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் அவர் சொன்னார்.
மார்ச் 8ஆம் தேதி தொடங்கிய இந்த ரமலான் சந்தை 23ஆம் தேதி வரை நடைபெறும்.