ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதும் எதிர்காலப் பொருளியலுக்கு ஏற்றவாறு அவர்களுக்குப் பயிற்சி அளித்து அதன்மூலம் அவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதே தொழிலாளர் இயக்கத்தின் முதன்மைப் பணியாக உள்ளது.
நிறுவனங்கள், தொழிற்சங்க ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 2019ஆம் ஆண்டு நிறுவனப் பயிற்சிக் குழுத் திட்டம் தொடங்கப்பட்டது.
அதுமுதல் இதுவரை 1,455 நிறுவனப் பயிற்சிக் குழுக்கள் (சிடிசி) உருவாக்கப்பட்டு அதன்மூலம் கிட்டத்தட்ட 100,000 ஊழியர்களுக்குத் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) பயிற்சி அளித்துள்ளது.
என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கின் தேசிய தினச் செய்தியில் இவ்விவரம் இடம்பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் 2,500 ‘சிடிசி’க்களை உருவாக்க என்டியுசி திட்டமிட்டுள்ளதாக அவர் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செய்தியில் அவர், “பயிற்சிகள் எந்தவோர் ஊழியரும் பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதிசெய்கிறது. பொருத்தமான திறன்கள் மூலம் தங்கள் போட்டித்தன்மையை ஊழியர்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
“அப்போதுதான் பணியிடத்தில் மாறிவரும் சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கவும் வேலையைத் தகவமைத்துக் கொள்ளவும் முடியும். இதன்மூலம் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற முடியும்,” எனத் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சிங்கப்பூரை பாதிக்கும் எனக் கருதப்படும் நிச்சயமற்ற புவிசார் அரசியல், பொருளியல் சூழலைக் கருத்தில் கொண்டு இது மிகவும் முக்கியமானது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், “குறிப்பாக பணியிடத்தில், நாம் பணிபுரியும் விதத்தையும் பணியின் தன்மையையும் அனைத்து வகையிலும் விரைவாக முன்னேறும் தொழில்நுட்பங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
“இந்த முன்னேற்றங்கள் எங்கள் ஊழியர்களின் வாழ்வாதாரத்திலும் ஊழியர்களுக்கு என்டியுசியுடனான இணக்கத்திலும் மிக ஆழமானத் தாக்கத்தை ஏற்படுத்தும்,” எனத் திரு இங் கூறினார்.
வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது, பயிற்சி வழங்குவது மட்டுமன்றி, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள ஊழியர்களின் நலன்களையும், குறிப்பாக, குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் போன்றோரின் நலன்களையும் என்டியுசி வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது எனத் திரு இங் தெரிவித்தார்.