பாலஸ்டியர் வட்டாரத்தில் இருந்த ஆலயம் ஒன்றில் கைவரிசையைக் காட்டியதாக நம்பப்படும் ஆடவர் இருவர் இம்மாதம் 16ஆம் தேதி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள், ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து நன்கொடைப் பெட்டிகளில் இருந்த பணத்தைத் திருடியதாகக் கூறப்படுகிறது.
டாய் ஜின் ரோட்டில் உள்ள ஆலயத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி பின்னிரவு 12.30 மணியளவில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
ஆலயத்திலிருந்து கிட்டத்தட்ட $300 முதல் $400 வரையிலான ரொக்கத்தை ஆடவர் களவாடினர்.
தொடக்கக் கட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்ட ஆடவர் இருவரும் சீன நாட்டவர் என்று தெரியவந்தது. அவர்களில் ஒருவருக்கு 43 வயது. மற்றவருக்கு 50 வயது.
கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் காவல்துறை அதிகாரிகள் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆடவரை அடையாளம் கண்டனர்.
திருட்டு நடந்த அதே நாளில் இருவரும் சிங்கப்பூரைவிட்டுப் புறப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.
அவர்கள் இம்மாதம் 16ஆம் தேதி மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது கைதாகினர்.
திருட்டுப்போன பணத்தை அவர்கள் ஏற்கெனவே செலவு செய்துவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
ஆடவர் இருவர்மீதும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) ஆலயத்துக்குள் புகுந்து திருடிய குற்றம் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுவரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.


