ஏறத்தாழ $38.6 மில்லியன் சம்பந்தப்பட்ட எல்லைதாண்டிய பணப்பரிமாற்றச் சேவைகளைச் சட்டவிரோதமாக வழங்கிய குற்றத்திற்காக இரு இந்திய நாட்டவர்கள் மீது இன்று (ஏப்ரல் 24) குற்றம் சுமத்தப்பட உள்ளது.
முறையான வேலை அனுமதி அட்டை இல்லாமல், உரிமமற்ற பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட உள்ளதாகக் காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த இரு ஆடவர்களில் ஒருவரின் வயது 45, மற்றவரின் வயது 33.
அவர்களில், 45 வயது ஆடவர் மீது கூடுதலாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படும். வேலை அனுமதிக்கான விண்ணப்பத்தில் பொய்யான வாக்குறுதி அளிக்க ஒரு நிறுவன இயக்குநரோடு இணைந்து சதி செய்தது தொடர்பான குற்றச்சாட்டு அது.
ரகசியத் தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 8ஆம் தேதி லிட்டில் இந்தியா வட்டாரத்தில் உள்ள நோரிஸ் ரோட்டில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் ஓர் ஆடவர் பிடிபட்டார். அவரிடமிருந்து $314,000 ரொக்கமும் 30 ஏடிஎம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

