கிச்சனர் ரோட்டில் உள்ள ‘சிட்டி ஸ்குவேர் ரெசிடென்சஸ்’ கூட்டுரிமை வீட்டில் காலை 6.30 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தார் பாதுகாவல் அதிகாரி சுரேஷ்குமார்.
அப்போது அவரைச் சிலர் அடித்து, உதைத்தது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் பாதுகாவலர் சங்கம் கூறியது.
தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்துத் தெளிவான தகவல் இல்லை. சங்கம் அனுப்பிய காணொளியில், கூட்டுரிமை வீட்டின் வாகன நுழைவாயிலுக்கு அருகே இரு ஆடவர்கள் சுரேஷ்குமாரை நோக்கிக் கையை வீசித் தாக்கியதைக் காணமுடிகிறது.
சம்பவம் குறித்துக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக சங்கம் கூறியது. பாதுகாவல் ஊழியர் சங்கத்துக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ்குமார் பணிபுரியும் நிறுவனம் பாதுகாவல் அதிகாரிகள் எவ்வித அச்சமும் இன்றித் தங்கள் கடமையை ஆற்றுவதை உறுதிசெய்வதில் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறியது. சட்டம், அமலாக்கம் போன்றவற்றுக்கு அப்பால் மக்களின் மனப்போக்கில் மாற்றம் தேவை என்று அது குறிப்பிட்டது.
பாதுகாவல் அதிகாரிகள் உள்ளிட்ட முன்னிலை ஊழியர்களைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துவதை அறவே பொறுத்துக்கொள்ள இயலாது என்று கூட்டுரிமை வீட்டின் நிர்வாகம் கூறியது.