மரினா கார்டன்ஸ் லேன், தெம்பனீஸ் அவென்யூ 11 ஆகிய பகுதிகளில் தனியார் வீடமைப்புக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிலங்கள் இரண்டு தலா $1 பில்லியனுக்கு மேலான ஏலத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. அவை 99 ஆண்டுகள் குத்தகையின்கீழ் ஒதுக்கப்பட்டவை.
மரினா கார்டன்ஸ் லேனில் உள்ள நிலப்பகுதி $1.034 பில்லியன் ஏல விண்ணப்பத்தை ஈர்த்த வேளையில் தெம்பனீஸ் அவென்யூ 11இல் உள்ள நிலப்பகுதி $1.206 பில்லியன் ஏல விண்ணப்பத்தை ஈர்த்தது.
ஆனால் அவற்றின் உயர்வான விலையையும் மேம்பாடு சார்ந்த அதிகமான இடையூறுகளையும் கருத்தில்கொண்டு, அந்த இரண்டு நிலப்பகுதிகளுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே ஏல விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதிகரித்துள்ள வட்டி விகிதம், கட்டுமானச் செலவுகள், மந்தமான பொருளியல் நிலை, சொத்துச் சந்தைத் தணிப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மத்தியில் மேம்பாட்டாளர்கள் கவனமாகச் செயல்படுவது இதற்குக் காரணம்.
மூன்றாவதாக, தெங்காவில் உள்ள ‘பிளான்டேஷன் குளோஸ்’இல் 495 கூட்டுரிமை வீடுகளைக் கட்டுவதற்கான நிலப்பகுதி அதிகமானோரின் ஆர்வத்தை ஈர்த்தது.
மூன்று நிலப்பகுதிகளும் 2022ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான அரசாங்க நில விற்பனைத் திட்டத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

