தனிநபர் நடமாட்டச் சாதன விபத்தில் இரு பதின்மவயது சிறுவர்கள் காயம்

1 mins read
6a69bce5-69a1-4dca-b882-f12a67eeb061
விபத்துக்குள்ளான இந்த இரு பதிமூன்று வயதுச் சிறுவர்களும் மருத்துவமனைக்கு சுயநினைவோடு அழைத்துச்செல்லப்பட்டனர். - படம்: SGSECRET/TELEGRAM

ஈசூனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) இரவு 11.10 மணியளவில் தனிநபர் நடமாட்ட சாதனத்துக்கும் (PMD) ஒரு காருக்கும் இடையே விபத்து நடந்துள்ளது.

அதில் இரண்டு பதிமூன்று வயது சிறுவர்கள் காயமடைந்து சுயநினைவோடு அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அந்தக் காரில் முன்பகுதியில் இருந்த கேமராவில் பதிவான காணொளியில் இரு பதின்ம வயதினரும் அந்தச் சாதனத்தில் அமர்ந்தபடி சாலையைக் கடப்பதும் வாகனம் அவர்களை நெருங்குவதும் தெரிகிறது. போக்குவரத்து விளக்குகள் காருக்குச் சாதகமாக பச்சை நிறத்தில் இருப்பதும், வலதுபுறமாக கார் வளைய முயலும்போது அதன் பாதையில் வந்த சிறுவர்கள் அதனை மோதுவதும் பதிவாகியுள்ளது.

தனிநபர் போக்குவரத்துச் சாதனத்தைக் கார் மோதியதில் இரு சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். ஈசூன் ரிங் ரோடு, ஈசூன் அவென்யூ 2 ஆகிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததை காவல்துறை திங்கட்கிழமை உறுதிசெய்தது.

கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படை தெரிவித்தது. காவல்துறை விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்