சிங்கப்பூரில் உள்ள ‘ஆப்பிள்’ பயனீட்டாளர்களுக்கு, சில செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் முன் தாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான புதிய நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் வயதுக்கு ஏற்பில்லாத செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய இளம் பயனீட்டாளர்களுக்கு அனைத்து முக்கியச் செயலி நடத்துனர்களும் தடைவிதிப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் கட்டாயமாக்கவிருக்கும் ஒரு மாதத்துக்கு முன்னர், அண்மைய செய்தி வெளிவந்துள்ளது.
“பிப்ரவரி 24ஆம் தேதிமுதல், ‘18+’ செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய, ஆஸ்திரேலியா, பிரேசில், சிங்கப்பூர் ஆகியவற்றில் உள்ள பயனீட்டாளர்கள் நியாயமான முறைகள்மூலம் தாங்கள் பெரியவர்கள் என்று நிரூபிக்கவேண்டும். இல்லாவிடில், அவர்களுக்குத் தடை விதிக்கப்படும்,” என்று செயலி மேம்பாட்டாளர்களுக்கு எழுதிய பதிவில் ‘ஆப்பிள்’ கூறியது.
அந்த முறைகள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் கேட்ட கேள்விகளுக்கு, ‘ஆப்பிள்’ பதில் அளிக்கவில்லை.
இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள், ‘ஆப்பிள்’, ‘கூகல்’, ‘ஹுவாவெய்’, ‘சாம்சுங்’, ‘மைக்ரோசாஃப்ட்’ ஆகிய அனைத்து முக்கியச் செயலி நடத்துனர்களும் பாதுகாப்பு அம்சத்தை நடைமுறைப்படுத்துவதை தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் கட்டாயமாக்குகிறது.

