விளையாட்டு மூலம் சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்தல்

விளையாட்டு மூலம் சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்தல்

1 mins read
e35bb0c8-cf81-42a6-bdbd-c79fbb73feee
புதுப்பிக்கப்பட்ட செங்காங் விளையாட்டு மையம் ஐந்து நீர் சறுக்குகள், சிறிய உடற்பயிற்சி நடவடிக்கைகளுக்கான இடங்கள், புதிய சுற்றுப்புற விளக்குகள் உள்ளிட்ட புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. - படம்: சாவ் பாவ்

சிங்கப்பூரர்கள் குறைந்த கட்டணத்தில், தரமான விளையாட்டு வசதிகளை எளிதாகப் பெறுவதற்கு விளையாட்டு வசதிகள் பெருந்திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறினார்.

விளையாட்டு சிங்கப்பூரர்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்தது. விளையாட்டுகள் மீள்திறன், குழுப்பணி, தளராமல் செயல்படும் தன்மை ஆகியவற்றை கற்றுத்தருகின்றன என்றார் அவர்.

சிங்கப்பூரர்கள் பள்ளிகளில் விளையாட்டு வசதிகளை எளிதில் அணுக இரட்டைப் பயன்பாட்டு முறையும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இரட்டைப் பயன்பாட்டு முறை என்பது கல்வி அமைச்சும் சிங்கப்பூர் விளையாட்டு மன்றமும் இணைந்து செயல்படுத்தும் முயற்சியாகும்.

இதன் கீழ், பள்ளி நேரத்திற்கும் அப்பாற்பட்ட நேரங்களில், அதாவது மாலை நேரங்களிலும் வார இறுதிகளிலும், பள்ளி விளையாட்டு அரங்குகள், மைதானங்கள் போன்ற பள்ளி விளையாட்டு வசதிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளன.

வரும் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட பொங்கோல் வட்டார விளையாட்டு நிலையம், தோ பாயோ ஒருங்கிணைந்த மேம்பாட்டு வளாகம், ஃபேரர் பார்க், தெங்கா ஆகிய தொகுதிகளில் விளையாட்டு வசதிகள், ஹவ்காங், குவீன்ஸ்டவுன் வட்டாரங்களில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு நிலையங்கள் திறக்கப்படவுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த வசதிகளுடன் மேலும் புதிய விளையாட்டு நிகழ்ச்சிகளையும் அரசாங்கம் வழங்கும். அனைத்து வயது, திறன்களைக் கொண்ட சிங்கப்பூரர்களையும் பகிரப்பட்ட பங்கேற்பின்வழி ஒன்றிணைப்போம் என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்