சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியான காணொளி ஒன்றில், 10க்கும் மேற்பட்ட சைக்கிளோட்டிகளைப் போக்குவரத்துக் காவல்துறையினர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) அதிகாலையில் விரட்டிப் பிடித்தது தெரியவந்துள்ளது.
வெஸ்ட் கோஸ்ட் அவென்யூ பகுதியில் தலைக்கவசம் அணியாமல் பதின்ம வயதினர் சிலர் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற காட்சி அதில் இடம்பெற்றுள்ளது. கையினால் இயக்கப்படும் வேகத்தடைக் கருவி (பிரேக்) இல்லாத ‘ஃபிக்ஸி’ ரக சைக்கிள்களை அவர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.
சாலையின் மூன்று தடங்களில் பிரிந்து சென்ற அந்தக் கும்பலை எச்சரிக்கை ஒலி (சைரன்) முழங்கக் காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர். சைக்கிள்களை நிறுத்துமாறு எச்சரித்தும், அவர்கள் தப்பிக்கும் நோக்கில் மேலும் வேகமாக ஓட்ட முயன்றனர்.
இறுதியில் எத்தனை பேர் பிடிபட்டனர் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சாலையோரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் நிற்பதும் அவர்களின் பின்னே சைக்கிளோட்டிகள் இருப்பதும் அந்த ‘டிக்டாக்’ காணொளியின் முடிவில் இடம்பெற்றுள்ளதாக ஏஷியாஒன் இணையத்தளம் கூறியது.
இச்சம்பவம் குறித்துச் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. காவல்துறையினரிடமிருந்து தப்பியோடியது தவறான செயல் என்று பயனாளர் ஒருவர் குறிப்பிட்டதற்கு, “நாங்கள் அவர்களிடம் சிக்கவில்லை,” என மற்றொருவர் பதிலளித்துள்ளார்.
சாலையில் சைக்கிள்களை ஓட்டிச் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயம். மேலும், ஒற்றை வரிசையில்தான் சைக்கிள்களை ஓட்ட வேண்டும்.
இச்சம்பவம் குறித்து விரிவான தகவல்களைப் பெற காவல்துறையைத் தொடர்புகொண்டிருப்பதாக ஏஷியாஒன் தெரிவித்தது.


