வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்னன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை வியாழக்கிழமை சந்தித்தார். திரு வாங் சிங்கப்பூர் வந்த முதல் நாளான அன்று, இருவரும் பல்வேறு உத்திபூர்வ விவகாரங்கள் குறித்து கலந்துபேசினர்.
திரு வாங் தென்கிழக்காசியாவுக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாள் பயணத்தில் மூன்று நாடுகளுக்குச் செல்கிறார்.
வியாழக்கிழமை, டாக்டர் விவியன் பூமலையில் திரு வாங்கிற்கு இரவு விருந்து அளித்து உபசரித்தார்.
பயணத்துறையிலும் வர்த்தகத்திலும் இருதரப்புக்கு இடையிலான பரஸ்பர விருப்பங்கள் குறித்தும், சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஆகாய இணைப்பைப் பற்றியும் அவர்கள் கலந்துபேசியதாக டாக்டர் விவியன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டது.
தாமும் திரு வாங்கும் ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது உள்ளிட்ட வட்டார, அனைத்துலக மேம்பாடுகள் குறித்து பேசியதாகவும் டாக்டர் விவியன் தெரிவித்தார்.
சிங்கப்பூரும் சீனாவும் அனைத்து நிலைகளிலும் அணுக்கமான உறவைப் பகிர்ந்துகொள்வதாக டாக்டர் விவியன் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே இருதரப்பும் பல பரிமாற்றங்களிலும் ஈடுபாடுகளிலும் கலந்துகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
“நீடித்து நிலைத்திருக்கக்கூடிய மேம்பாடு, மின்னிலக்கப் பொருளியல், ஒருங்கிணைப்பு ஆகிய அம்சங்கள் உள்பட, நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளை நாம் தொடர்ந்து ஆராய்வோம்”, என்றார் டாக்டர் விவியன்.