சிங்கப்பூர் நாணய ஆணையம் படைப்புகளை உருவாக்கும் ஐவருக்கு எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பவிருக்கிறது. உரிமமின்றி நிதி ஆலோசனைகளை அவர்கள் கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்குமாறு அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உள்ளடக்கத்தையும் நடைமுறைகளையும் சரிசெய்துகொள்ளுமாறு ஆணையம் கூறியுள்ளது. உரிமமின்றி நிதி ஆலோசனைகளைத் தருவோர்மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது எச்சரித்தது.
படைப்புகளை உருவாக்குவோருக்கு ஆணையம் எச்சரிக்கைக் கடிதங்களை அனுப்பியிருப்பது இதுவே முதன்முறை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு அறிகிறது.
அவர்கள் யாவர் என்பதை மத்திய வங்கி இன்னும் அடையாளம் காணவில்லை. எவ்வாறு உள்ளடக்கத்தைச் சரிசெய்யவேண்டும் என்பதையும் அது குறிப்பிடவில்லை.
நிதி ஆலோசனைச் சட்டத்தின்படி, உரிமமின்றி ஆலோசனை கொடுப்பவருக்கு $75,000 வரை அபராதமோ மூவாண்டுச் சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 2025) இணையத்தில் நிதித் தகவல்களைப் பொறுப்புடன் பகிர்ந்துகொள்வதன் தொடர்பில் ஆணையம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் அதன் எச்சரிக்கை வந்துள்ளது.
நிதி நிறுவனங்கள் இணையத்தில் விளம்பர நடவடிக்கைகளைப் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
ஒவ்வொருவரும் தகவல்களைப் புரிந்துகொண்டு முடிவெடுப்பதைப் படைப்புகளை உருவாக்குவோர் ஊக்குவிக்க வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது. தனிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு எந்த அளவுக்கு இழப்புகளைச் சமாளிக்கமுடியும் என்பதைத் தனிநபர்கள் தெரிந்துகொள்ளவும் வழியமைக்க வேண்டும் என்றும் அது கோரிக்கை விடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
படைப்புகளைப் பின்பற்றுவோர் வரவுசெலவைச் சரிபார்ப்பதையும் மிதமிஞ்சிச் செலவிடுவதற்கு எதிராக எச்சரிக்கையுடன் இருப்பதையும் அவற்றை உருவாக்குவோர் ஊக்குவிக்க வேண்டும். அவற்றுடன் சிறிய எழுத்துகளில் இருப்பவற்றோடு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் படிக்குமாறும் தகவல்களைப் பார்ப்போருக்கு நினைவூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
படைப்புகளைப் பின்பற்றுவோருடன் அவற்றை உருவாக்குவோர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஆணையம் கேட்டுக்கொண்டது. இணையத்தில் படைப்புகளை உருவாக்குவோர் துல்லியமான தகவல்களையும் அவற்றில் உள்ள ஆபத்துகளையும் வெகுமதிகளையும் தெளிவாக வழங்கவேண்டும் என்றும் கூறப்பட்டது.
படைப்புகளைப் பின்பற்றுவோரின் நிதி நலன்களைக் கருத்தில்கொள்வதோடு அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் ஆணையம் வலியுறுத்தியது.